ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் உத்தம் வில்லன். இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து, இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், ஆண்ட்ரியா, பூஜா குமார், கே.விஸ்வநாத், ஜெயராம், ஊர்வசி, எம்.எஸ் பாஸ்கர், சித்ரா லட்சுமணன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல் ஹாசன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் கமல் பேசும் போது, உத்தமவில்லன் படம் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத படம். இது ஒரு நட்சத்திர நடிகனின் கதை. இதில் உத்தமனும் நானே.. வில்லனும் நானே... இது எனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமா என்று கேட்கிறார்கள்? எனது ஒவ்வொரு கதையிலும் என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது இருக்கும். நான் மட்டுமல்ல இந்த படத்தை எந்தவொரு நடிகர் பார்த்தாலும், அந்த நடிகரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இது பிரதிபலிக்கும் என கமல் கூறினார்.
அப்போது, சமீபத்தில் லிங்கா படம் தொடர்பாக விநியோகிஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டது தொடர்பாக கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல், சினிமா என்பது வியாபாரம் சார்ந்த ஒரு கலை. இதில் நஷ்ட ஈடு கேட்பது நியாயம் அல்ல. ரசிகர்கள் தியேட்டரில் பேய் படம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று பாதியில் எழுந்து செல்கிறார்கள், அவர்கள் எல்லோரும் எங்களுக்கு பாதி பணத்தை தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும், இது சாத்தியமாகுமா? அது போல் தான் இதுவும் என தெரிவித்தார் கமல்...
|