மும்பையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி ஆகியோர் துவங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கமல் பேசும் போது, "சினிமாவில் புதியதாக தொழில்நுட்பங்களை புகுத்தும் போது ஒரு விதமான மாய பிம்பம் நம்மிடையே நிலவுகிறது. இப்படியான ஒன்றை முயற்சிக்கும் போது சந்தித்த சோதனைகளையும் துயரங்களையும் நினைக்கவேண்டும். அனைத்துப் படங்களையும் ஒரே மாதிரியாக கவனிக்க வேண்டும். எனக்குப் பிடித்தமான நடிகர் அமீர்கான், இப்போது என்னுடன் மேடையில் இருக்கிறார்" என்றார் கமல்ஹாசன்.
அமீர்கான் பேசும்போது, கமல் நடித்த 'விஸ்வரூபம்' படத்துக்கு 2013–ல் பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடையும் விதிக்கப்பட்டது. அப்போது கமலுக்கு ஆதரவாக நான் இருந்து இருக்க வேண்டும். வேறு பணிகளில் பிசியாக இருந்ததால் அதை தவறவிட்டு விட்டேன். இதற்காக வெட்கப்படுகிறேன். கமலிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
திரைப்படங்களுக்கு தடை விதிப்பது சரியான அணுகுமுறை அல்ல. தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் பெற்ற பிறகும் படத்தை தடை செய்வது கூடாது.
தணிக்கை சான்று பெற்ற படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் போய் பயமின்றி பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்வது, மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும். தணிக்கை குழு அனுமதி பெற்ற படங்களை நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.எந்த கருத்துகளையும் தடை விதிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதற்கெல்லாம் நான் எதிரானவன்.
இவ்வாறு அமீர்கான் கூறினார்.
|