|
|||||
இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்! |
|||||
இந்திய நாட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல ராஜ்ஜியங்கள் ஆட்சி புரிந்ததால், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும் ஏராளமானவை உள்ளன. தோண்டத் தோண்ட கிடைக்கும் ஒரு அற்புதம்தான் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள். இதுவரை மறைந்திருந்த பல இடங்களை நாம் கண்டுபிடித்தாலும் அதே அளவு இடங்களும் பூமிக்குள் புதைந்தோ? மர்மமான முறையிலோ? இருந்துதான் வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்.
ஹவா மஹால்
ஜெய்ப்பூரில் உள்ள இந்த மஹால் 1799ம் ஆண்டு மகாராஜா 'சவாய் ப்ரதாப் சிங்' என்பவரால் ஒரு மணிமகுடம் வடிவில் கட்டப்பட்டது. இது வளைந்து கட்டப்பட்டது என்றாலும் மிகவும் திடமாக நிற்பது இதனுடைய சிறப்பு அம்சமாகும். இங்குக் காலை 9.30 மணியிலிருந்து 4.30 மணிவரை சுற்றிப்பார்க்கலாம். அதேபோல் நுழைவுக்கட்டணம் ரூ 10 ஆகும்.
கஜுராஹோ கோவில்
இந்தக் கோவில் மத்திய பிரதேச மாநிலத்தில் 950 AD காலக்கட்டத்தில் சந்தே ராஜ்ஜியத்தால் கட்டப்பட்டது. இது ஜெயின் மற்றும் ஹிந்து மத அடிப்படையில் கட்டப்பட்டது. அதேபோல் இங்கு இரண்டு தரப்பு கடவுள்களையும், அப்சரஸ்களையும் காணலாம். இங்குக் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சுற்றிப்பார்க்கலாம். நுழைவுக்கட்டணம் 10 ரூபாய்.
உமாயூன் கல்லறை
டெல்லியில் அமைந்துள்ள இந்தச் சமாதி 1572ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதுதான் தாஜ்மஹால் கட்டியதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. உமாயூனின் மனைவி அவரின் மேல் உள்ள காதலால் இந்தச் சமாதியைப் பிரம்மாண்டமாகக் கட்டினார். இதன் அருகிலேயே பாபருடைய சமாதியும் உள்ளது. இங்குக் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை செல்லலாம். நுழைவுக்கட்டணம் 40 ரூபாய்.
குதுப் மினார் (Qutab Minar)
டெல்லியில் உள்ள குதுப் மினார் என்ற கட்டடத்தை வட இந்தியாவை ஆண்ட 'குதுப் உத்தின் ஐபக்' என்ற முஸ்லிம் அரசரால் கட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவரே வட இந்தியாவை முதன் முதலில் ஆண்ட முஸ்லிம் அரசர் என்றும் நம்பப்படுகிறார். செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை இந்திய முஸ்லிம் கலப்பு கட்டடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தத் தளத்திற்கு அருகிலேயே குவாட் உல் இஸ்லாம் என்ற மசூதியும் உள்ளது. இங்குக் காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சுற்றிப்பார்க்கலாம். நுழைவுக்கட்டணம் 10 ரூபாய்.
ராணி கி வாவ்
இது குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் 'உதயமதி' என்ற ராணியால் கட்டப்பட்டது. உதயமதி சோலங்கி ராஜ்ஜியத்தை ஆண்ட தனது கணவன் பீம்தேவ் ஞாபகமாகக் கட்டிய ஒன்று. இது கீழ் நோக்கிக் கட்டப்பட்டதால் பிற்பாடு போர்க் காலங்களில் பக்கத்து ஊர்களுக்குத் தப்பிக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சுவாரசியமான வரலாற்று இடத்திற்குக் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிவரை செல்லலாம். நுழைவுக்கட்டணம் 5 ரூபாய்.
பீம்பேட்கா பாறை இடம்
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த இடம்தான் அனைத்திலும் விட மிக மிகப் பழமையான இடம். எத்தனைப்பழமை என்றால் மனிதர்கள் பாறைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த காலத்தில், அதாவது கிட்டத்தட்ட 30 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தவை. ஆனால் இந்த இடத்தை கண்டுபிடித்தது 1957ம் ஆண்டுதான். இங்குக் காலை 6.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை சுற்றிப்பார்க்கலாம். நுழைவுக்கட்டணம் 10 ரூ ஆகும்.
மெஹ்ரன்கர் கோட்டை
ஜோத்பூரில் உள்ள இந்தக் கோட்டை இந்தியாவில் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றாகும். இது ராவோ ஜோதா என்பவரால் 1459ம் ஆண்டு கட்டப்பட்டது. மலையில் உள்ள இந்தக் கோட்டைக்கு 7 நுழைவாயில் உள்ளன. ஒவ்வொரு நுழைவாயிலுக்கும் ஒவ்வொரு பின்னணி கதை உள்ளது. உதாரணத்திற்கு விஜய் கதவு என்ற நுழைவாயில் மன்னர் மான் சிங் ஜெய்ப்பூரைக் கைப்பற்றியதன் நினைவாகக் கட்டப்பட்டது.
தமிழ் நாடு
இந்தியாவில் மற்ற இடங்களை விடத் தமிழ்நாட்டில் அதிகப்படியான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், மஹாபல்லிபுரம், மீனாட்சி அம்மன் கோவில் போன்றவை சுற்றிப்பார்க்கலாம். |
|||||
by Kumar on 30 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|