சென்னை கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகரில் 11-05-2014 ஞாயிறு மாலை 2 மணி முதல் 6 மணி வரை தமிழ் எழுச்சிப் பேரவை, எண்ணம் அறக்கட்டளை எழுத்தேணி கல்விதொண்டு அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் கூட்டம் முனைவர் இறையரசன் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் மறத்தமிழ் வேந்தன் வரவேற்றார். தேனிசை செல்லப்பாவின் பேரன் கரிகாலன் தமிழிசைப் பாடல்களைப் பாடினார். புதுவை திராவிடப் பேரவைத் தலைவர் நந்திவர்மன் உலக மொழிகளில் திருக்குறள் இதுவரை மொழிபெயர்க்கப் பெற்றுள்ள நூல்கள் பற்றியும் ஈழத்தமிழினப் படுகொலை பற்றியும் எஞ்சியுள்ள மக்களைக் காப்பதுபற்றியும் மற்ற மாநிலத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் அவரவர் மொழியில் எடுத்துக் கூற வேண்டும் என்றார். கவிக்குயில் ஆசிரியர் ஆனைவாரி ஆனந்தனார் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 % இடஒதுக்கீடு செய்துள்ளதைப் பாராட்டினார்; மற்ற 75% மாணவர்களுக்குக் கூறப்படும் பாடத்தை அவர்கள் கேட்கிறார்களே தவிர சீருடை, புத்தகம், போக்குவரத்து ஆகிய அனைத்தும் ஏழை மாணவர்களுடையதே; எனவே அப்பள்ளிகளுக்கு மானியம் அளிக்கத் தேவையில்லை என்றார்.அமெரிக்கக் கரோலினா தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் சுந்தர செயபாலன் எழுத்தேணி அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவர்களின் கல்வித்தொகை வேண்டல் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு பேசுகையில், அமெரிக்காவில் 18 வயதுவரை மாணவர்களுக்கு இலவசக் கல்வியும் மதிய உணவும் வழங்கப் பெறுகின்றன; ஆனால் தமிழ் நாட்டில் 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி என்ற சட்டம் இருக்கும்போது தனியார் பள்ளிகள் பல ஆயிரக் கணக்கான ரூபாய் கட்டணம் பெறுகின்றன; எல்லோருக்கும் கட்டாயம் இலவசக் கல்வி தரவேண்டும்; மதுவால் மக்கள் பொருளாதாரமும் பண்பாடும் அழிகின்றன; மதுவிலக்கைக் கொண்டுவந்தால் அரசுக்கு 23 ஆயிரம் கோடி இழப்பு என்கின்றனர்; இலவசமாக டி.வி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என வழங்குவதை நிறுத்தி இந்த இழப்பைச் சரிசெய்யலாம் என்றார். கல்வி உதவிதொகை பெற விரும்பும் மாணவர்கள் “எழுத்தேணி அறக்கட்டளை, புதுப் புல்லுக் காரத் தெரு, தஞ்சாவூர்” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்; “ezuththenitrust@gmail.com” என்ற மின்னஞ்சலுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அறக்கட்டளைச் செயலாளர் முனைவர் இறையரசன் கூறினார்.கலந்து கொண்டோர்க்கு திருமூலர் தவ மைய நிறுவனர் தனசேகரன் வர்மக் கலையில் ஓர் புள்ளியைக் கற்றுத்தந்தார். வர்மக் கலையை முழுதும் கற்றுக் கொள்ள விரும்புவோர் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள வகுப்பில் கலந்துகொள்ளலாம் என்று அவர் கூறினார். கவிஞர் வாலறிவன், தமிழாசிரியர் பொன்னுசாமி ஆகியோரும் உரையாற்றினர். மகளிரும் மாணவர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
|