வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் பாதுகாப்பாக தொழில் செய்யவும், தங்கவும் சிங்கப்பூர் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், சிங்கப்பூரில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிலை குறித்து கூறியதாவது, சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பத்து லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களது தொழில் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஆகியவற்றில் சிங்கப்பூர் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவர்கள் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது.
எந்த ஒரு வெளிநாட்டுத் தொழிலாளரையும் அநீதியாக, மோசமாக நடத்த நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் நல்லமுறையில் நடத்தப்படுவார்கள். சரியான ஊதியம் பெற வகை செய்யப்படுவார்கள். அவர்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். அவர்களுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என லீ சீன் லூங் தெரிவித்துள்ளார்.
|