2014 பெட்னா பேரவை விழாவில் ஒரு நிகழ்ச்சி
மினசோட்டா மாநிலம் அமெரிக்காவின் மிகக்குளிரான பகுதி, -20 டிகிரி என்பது இந்த ஆண்டு பல நாட்கள் நிகழ்ந்தது. புலம் பெயர்ந்த தமிழர்கள் எவரும் குளிரானப் பகுதியில் இருந்து வந்தவர் கிடையாது. ஊட்டி குளிரையே தாங்க முடியாதவர்கள் எப்படி இந்த குளிர் மாநிலத்தில் வாழ்கிறார்கள் என்பது எப்பொழுதுமே ஒரு கேள்வி.
ஆனால் தமிழரின் மொழி, பண்பாடு, கலாச்சாரத் தேடல் குறைவதேயில்லை, மினசோட்டாத் தமிழரும் அதற்கு விதிவிலக்கன்று. ஆயினும் தமிழரின் தொன்மையான கலைகளை மண்மனம் மாறாமல் அமெரிக்கத் தமிழரை வைத்தே சிறப்பாக நடாத்துவதில் சிறப்புடையவர்கள் மினசோட்டாத் தமிழர்கள். அதிலும் படைப்பாளி திரு. சச்சிதானந்தன் அவர்கள் ஒரு நுணுக்கமான முழுமையான இயக்குனர்.
கடந்த ஆண்டு சிறார் சிறுமியரை வைத்து "தீரன் சின்னமலை வில்லுப்பாட்டு" நடாத்தினார். தமிழ்ப் பள்ளியில் பயின்று வரும் மாணாக்கரை 25 நிமிடங்கள் தமிழிலேயே தீரனின் கதையை பாட்டு வடிவில் நேரலையாக பேசி/பாடி மினசோட்டா மேடையிலும் டொராண்டோ பேரவை விழாவிலும் நிகழ்த்தி அசத்தினார்கள்.
இந்த பெரு வெற்றியைத் தொடர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தெருக்கூத்துக் கலையை தமிழகத்திலேயே மறந்து விட்ட நிலையில், அமெரிக்கத் தமிழரை மட்டுமே நடிக்க வைத்து, அதற்கான திரைக்கதையை அசல் தெருக்கூத்து வடிவில் எழுதி, அதற்கான நுண்ணிய இசையமைத்து ஆறு மாத கடும் உழைப்பில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பொங்கல் விழாவில் அரங்கேற்றினார்.
தெருக்கூத்தின் சிறப்பு ஆடை, ஒப்பனை, அலங்காரம் ஆகியவற்றை படங்களே பதில் சொல்லும். சதாரணமாக தெருக்கூத்து வாயிலாகச் சொல்லப்படும் கதைகளில் ஒரு இராசா (அ) ஒரு நாயகன் (மதுரை வீரன் போன்று) கொண்ட அம்சமாகவே இருக்கும். சிலப்பதிகார காவியத்தில் இளங்கோவடிகள் தமிழ் மண்ணின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டிய அரசர்களை அங்கமாக வடித்திருப்பார். அதிலும் கதையில் நாயகனும் கோவலன் அன்று, முதன்மை நாயகி கண்ணகி அத்துடன் மாதவி.
பண்டைய தமிழகத்தின் மூவேந்தர்களின் ஆட்சி மாட்சி வீழ்ச்சிகளை பறைசாற்றுவது சிலம்பின் கதை, இதைச் சிறப்பாக நடாத்தி காட்டிய குழுவின் பெயரும் " மினசோட்டா மூவேந்தர் கலைக் குழாம்". மூன்று அரசர்களுக்கும் இராச மதிப்புடனான அலங்காரம் தேவை, அத்துடன் மூவரையும் வேறுபட்டு காட்ட வேண்டும், இதற்கு ஒரு தெருக்கூத்து அலங்காரங்களான தலைப்பாகை , தோல் பட்டை, அங்கி போன்றவை 3 அரசர்களுக்கு தேவைப்பட்டது, இதன் மூலம் தமிழகத்தில் தெருக்கூத்து கலைஞர்கள் நடத்தும் கூத்தை விட பிரமாண்டமாக அரங்கேறியது என்பதை அறியலாம்.
மூன்று அரசர்களின் மாறுபட்ட அலங்காரத்துடன் அவர்களின் அறிமுகமும் நடிப்பும் தெருக்கூத்தின் பல்வேறு முறைகளை பயன்படுத்தி இருந்தது மிகச்சிறப்பு. முழுமையானத் தெருக்கூத்தில் பயன்படுத்தப்படும் அத்துணை யுக்திகளும் சேர்த்திருந்தார் இயக்குனர் சச்சி. கட்டியக்காரர், அவரின் கதை சொல்லும் பாணி,
அடித்த அந்தர் பல்டி அத்துடன் இழையோடிய நகைச்சுவை. முதன்மை கதாபாத்திரங்கள் கண்ணகி, மாதவி, கோவலன் ஆகியோர் தனிச்சிறப்புடன் நடித்து அசத்தினார்கள். முத்தாய்ப்பான காட்சிகள் பல இருந்தாலும் மூன்று அரசர்களின் அறிமுகம் அருமை. கோவலன் மாதவியை பிரியும் காட்சியில் மாதவியின் உணர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியதும் சிறப்பு.
தெருக்கூத்துக்கே உரிய சிறப்பு உச்சக்கட்டக் காட்சி, சிலம்பின் கதையிலும் அதுவே முன்னின்றது. கண்ணகி உச்சக்கட்ட காட்சியில் பாண்டிய அரசவையில் மிரட்டினார். பாண்டியரும் கண்ணகியும் வாதாடிய திரைக்கதை எதுகை மோனையுடன் பாடலாக சந்தத்துடன் ஆனால் ஆத்திரம் குறையாமல் இருந்தது கண்ணுக்கும் காதுக்கும் பெறு மகிழ்ச்சி அளித்தது.
தெருக்கூத்து என்பது கதை பண்டைய கதை சொல்லும் நாடக முறை. இந்தியத் துணைக்கண்டத்தின் மிகத் தொன்மையான நாடக பாணி என்பது வரலாற்று உண்மை. தமிழர் நாம் அதை மறந்து விட்டோம், தெருக்கூத்து என்றால் அதிக பட்சம் கம்யூனிச தோழர்கள் நடத்தும் நவீன தெருக்கூத்தைப் பற்றி சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
அசல் பண்டைய முறையை முழுதும் கடைப்பிடித்து இன்றும் போற்றுபவர்கள் நம் முந்தைய சேர நாடும் தற்போதைய கேரள மலையாள மக்கள் அதை "கதகளி"யாக போற்றி பாதுகாக்கின்றனர். கதகளிக்கு முன்னோடி தெருக்கூத்துதான். நீண்ட வரலாறுள்ள மேலை நாடுகளிலும் அவர்கள் இதைப்போன்ற கலைகளை இன்றும் போற்றி புகழ்கின்றனர். ஒபரா என்று அழைக்கப்படும் அபரிமிதமான நாடக முறையும் தெருக்கூத்து போன்றதுதான்.
பண்டைய தெருக்கூத்து முறைதான் இன்றைய சினிமா பாணியும். ஒரு ஒப்பீடு, பாடல்கள் நிறைந்த சினிமா (40, 50 களில் முழுதும் பாடல் முறை படங்கள் தான் வெளிவந்தன), கதாநாயகனுக்கு சிறப்பு அறிமுகம், அபரிமிதமான அலங்காரம் அவரை தனித்துவத்துடன் வெளிக்காட்ட, கட்டியக்காரனை போல் நகைச்சுவை நடிகர், தெருக்கூத்தில் கதையை நகர்த்துபவரும் கட்டியகாரர் தான். கதை, திரைகதை, பாடல்கள், அறிமுகம், நகைச்சுவை, உச்சக்கட்ட காட்சி போன்றவை அனைத்தும் நிகழ்கால திரைப்படங்களில் அனைத்திலும் கடைபிடிக்கப் படுவது நாமறிந்தது.
செயற்கரிய செயல்களை செய்வதில் சிறப்புக்குரியவர் எங்கள் சச்சி என்பது நாங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் எங்கள் எதிர்பார்ப்பையும் மீறி தெருக்கூத்துக் கலையை அமெரிக்க மண்ணிலேயே அரங்கேற்றிய திறமை கண்டு வியக்கிறேன்.
சிலப்பதிகாரக் காதையை கையிலெடுத்தது தொடங்கி அதற்கு கதை வசனம் சொந்தமாக எழுதி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடும் உழைப்பில் நடிப்பு, ஒப்பனை, இசை ஆகியவற்றை இந்த மண்ணிலேயே நடாத்தி காட்டியது அற்புதத்திலும் அற்புதம்.
மறந்து போன இந்த உன்னதக் கலைக்கு உயிர் கொடுத்த நடிகர்கள், ஒப்பனையாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடியவர்கள் ஆகிய அத்துணைப் பேறும் போற்றுதலுக்குரியவர்கள். மினசோட்டா தமிழரை சென்றடைந்த முதல் நிகழ்வு, மினசோட்டா இந்திய சமூகத்தையும், அமெரிக்க கலைச் சமூகத்தையும் சென்றடைய சென்றடைய FeTNA பேரவை விழா ஒரு அறிய வாய்ப்பு.
-(சிவானந்தன் மாரியப்பன்)
|