பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக போராடியதால், மலாலா என்ற 15 வயது சிறுமியை தாலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்து உதவியது. தற்போது அவர், இங்கிலாந்து பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். இந்நிலையில் அவர் தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனையை, 'நான் மலாலா' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட விரும்பினார். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்து ஆசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள 'நான் மலாலா' என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. பாகிஸ்தானில்,இப் புத்தகம் ரூ.595க்கு விற்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளில் தடை :
நான் மலாலா புத்தகத்தில் மேற்கத்திய சக்திகளின் தூண்டுதலால் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம் பெற்றிருப்பதால் 'நான் மலாலா' புத்தகத்தை பள்ளி பாடதிட்டம் மற்றும் நூலகங்களில் தடை விதிப்பதாக பாகிஸ்தான் அனைத்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் மிர்சா காஷிப் அலி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறுகையில், பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.கோடிக்கணக்கான மாணவிகளுக்கு சுமார் 7 லட்சம் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் பெண் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மலாலா எழுதிய புத்தகத்தில் சல்மான் ருஷ்டியின் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் வகையிலான சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஆகவே, பாகிஸ்தானில் உள்ள சுமார் 1.5 லட்சம் பள்ளிகளின் பாடதிட்டமாகவோ, கட்டுரை தொடர்பான போட்டிகளிலோ, பள்ளி நூலகங்களிலோ அந்த புத்தகத்தை பயன்படுத்த கூடாது என்று நாங்கள் தடை விதித்துள்ளோம் என மிர்சா காஷிப் கூறியுள்ளார்.
|