ஐ படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஐ.
இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதிக பொருட் செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வந்த ஐ படத்தை தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே இப்படத்தை ஆவலாய் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.
ஐ படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து தற்போது ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி படம் ரிலீஸாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் மும்முரமாக நடந்து வந்த வேளையில், ஐ படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுப்பற்றிய விபரம் வருமாறு... பிக்சர்ஸ் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திடம், ஐ பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை அவர் சொன்ன தேதியில் திருப்பி தரவில்லை. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஐ படத்தை ரிலீஸ் செய்ய 3 வாரம் காலம் இடைக்கால தடைவிதித்தார். மேலும் இதுதொடர்பாக வருகிற ஜனவரி 30ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் ஐ படம் ரிலீஸாவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
|