|
|||||
ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடி வரும் இந்தியப் பெண் லட்சுமிக்கு சர்வதேச துணிச்சல் மிக்க பெண் விருது வழங்கப்படுகிறது !! |
|||||
உலக அளவில் துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் இன்டர்நேஷனல் வுமன் ஆப் கரேஜ் அவார்ட்(International Women of Courage Award) இந்த வருடம் இந்தியாவை சேர்ந்த ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகி, போராடி வரும் லட்சுமிக்கு வழங்கப் பட உள்ளது. கடந்த 2007ல் உருவாக்கப்பட்ட இந்த விருது, மனித உரிமை, பெண்கள் சம உரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பெண் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரே சர்வதேச விருது இது மட்டுமே. லட்சுமியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், பிஜி, ஜியார்ஜியா, சவூதி அரேபியா, கவுதமாலா, உக்ரைன், மாலி, தஜிகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விருதை உலக மகளிர் தினமான மார்ச் 8 ம் தேதி அமெரிக்க அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்க உள்ளார். முன்னதாக, கடந்த 2005-ஆம் ஆண்டு லட்சுமி என்ற பெண் டெல்லியின் கான் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது அவருடைய நண்பரின் சகோதரர் ஒருவர், அவர்மீது ஆசிட் வீசினார். அதில் அவருடைய முகம் நிரந்தரமாக விகாரமானது. இதனால், லட்சுமி முடங்கி போய் விடாமல், ஆசிட் தாக்குதலுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தினார். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு, அவர்களுக்கான இழப்பீடு குறித்தும் ஆசிட் தாக்குதலை தடுப்பது பற்றியும் அவரே முன்னின்று இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். மேலும், சட்டவிரோதமாக ஆசிட் விற்கப்படுவதை தடுக்க 27 ஆயிரம் கைழுத்துக்கள் அடங்கிய புகார் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து ஆசிட் விற்பனையின் ஒழுங்குமுறைகளை உடனடியாக அமல்படுத்தவும், மக்களவையில் இதுகுறித்த விவாதத்தை நடத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 04 Mar 2014 0 Comments | |||||
Tags: Laxmi International Women of Courage Award International Women of Courage Award 2014 Indian Women Laxmi Acid Laxmi ஆசிட் லட்சுமி துணிச்சல் பெண் மணி | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|