இந்தியாவில், இந்தியாவில் சீன நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக, பிரத்யேக தொழில் பூங்காவை அமைக்க பிரதமர் மன்மோகன்சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் சீனாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், சீன அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, கடந்த 9 ஆண்டுகளாக, இந்தியா, சீன இடையேயான உறவு மேம்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தக உறவு கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில், சீன வர்த்தக பூங்கா அமைக்கும் திட்டம் வரவேற்புக்குரியது. இந்திய-சீன மக்களின் கூட்டுத்தொகை, 250 கோடி. எல்லை பகுதியில் அமைதி நிலவினால் தான், இவ்வளவு மக்களும் நிம்மதியாக இருக்க முடியும். எல்லை பகுதி தொடர்பான பிரச்னையை தீர்ப்பதற்காக தான், சிறப்புப் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பை இருநாடுகளும் இணைந்து ஏற்படுத்தியுள்ளோம். எல்லைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக, இந்த சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதற்கு தீர்வு காண்பதற்கு சிறிது காலம் பிடிக்குமென்றாலும், இந்த விவகாரத்தில் இதுவரை அவர்கள் ஆற்றியுள்ள பணிகள் பாராட்டுதல்களுக்கு உரியவை. எல்லையில் அமைதியை நிலை நாட்டுவதில் இரு நாட்டு அரசுகளும் உறுதியாக உள்ளன. இருதரப்பு உறவில் முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படுவதற்கு எல்லையில் நிலவும் அமைதிதான் அடிப்படையாக அமையும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
|