அமெரிக்காவில் வரும் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியரான பாபி ஜிண்டால் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராக பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம் வரும் 2016ம் ஆண்டுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து, நடைபெறும் அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியரான பாபி ஜிண்டால் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. தற்போதைய எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் முக்கிய தலைவரும், லூசியானா மாகாண கவர்னருமாக ஜிண்டால் உள்ளார். இவர் இரண்டாவது முறையாக கவர்னர் பதவி வகிப்பதால், அமெரிக்க சட்டப்படி மீண்டும் ஒருமுறை கவர்னர் பதவிக்கு போட்டியிட முடியாது.
எனவே, அதிபர் பதவிக்கு ஜிண்டால் போட்டியிட வாய்ப்பிருப்பதாக குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் டேவிட் விட்டர் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டேவிட் விட்டர் அளித்த பேட்டியில், பாபி ஜிண்டால் ஒரு மதிக்கத்தக்க மனிதர். திறமையானவர். அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என நானும் கருதுகிறேன். அதிபர் ஆவதற்கான அனைத்து அரசியல் தகுதிகளும் ஜிண்டாலுக்கு உண்டு. போட்டியிட்டால் அவர் அதிபர் ஆவார் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு என அவர் கூறியுள்ளார்.
|