திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது) மதி-மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக.(கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமை உண்மையின். 'சென்றாரைக் காண'என்றும் குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதில்லை என அதனால் துயில் பெறாது வருந்துகினறாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி'என்பது அசை நிலை)
மணக்குடவர் உரை:
என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி. பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
வன்புறை யெதிரழிந்த தலைமகளின் காமமிக்க கழிபடர் கிளவி. மதி- நிலாவே! ; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப் படாதி - என் நெஞ்சில் இடைவிடாதிருந்தே விட்டுப்போன என்காதலரை நான் என் கண்ணளவாலாயினுந் தலைக்கூடும் வகை, நீ மேற்றிசையில் மறையா திருப்பாயாக; வாழி - நீ(அங்ஙனஞ் செய்யின்) நீடு வாழ்க! கண்ணளவால் தலைக்கூடுதலாவது, மதி இருவராலும் நோக்கப் படும்போது இருவர் கண்ணும் அதன்கண் சேர்தல். முதலொடு சினைக் கொற்றுமை யுண்மையால் 'சென்றாரைக் கண்ணினாற் காண' என்றும், குறையிரக்கின்றாளாதலின் 'வாழி' என்றும், கூறினாள். 'விடா அது', 'படா அதி' இசைநிறை யளபெடைகள். இனிப் படாது என்பது பாடமாயின் காதலரைக் கனவிற் கண்ணாற் காணுமாறு மதிபடுகின்றதில்லையென, அதனால் தூக்கம்பெறாது வருந்தும் தலைமகள் கூற்றாகக் கொள்ளப்படும்.
கலைஞர் உரை:
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.
சாலமன் பாப்பையா உரை:
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அவர் அருகிலில்லாததால் என் உயிர் தேய்கிற தென்றாலும் அவரைக் காணும் ஆசையால் என் உயிர் போகாது.) என் அறிவே! உன்னை வாழ்த்திக் கேட்டுக்கொள்ளுகிறேன். பொறுத்துக் கொள். அவசியத்தைக் கருதி விடாப்பிடியாகப் பிரிந்துபோய் இத்துணைத் துன்பமும் உண்டாக்கிவிட்ட காதலர் வருவார். அவரைக் கண்டவுடன் உன் துன்பமெல்லாம் நீங்கிவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மதியே! எனது நெஞ்சத்தில் எப்போதும் இருந்துவிட்டுப்போன காதலரை யான் என் கண்ணினாலேனும் காணுகின்ற வரையில் நீ மறையாமல் இருப்பாயாக: நீ வாழ்வாயாக.
Translation
Set not; so may'st thou prosper, moon! that eyes may see
My love who went away, but ever bides with me.
Explanation
May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.