விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை,
குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும். (உட்பகையின் நீக்குதற்கு 'விருப்புஅறாச் சுற்றம்' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின்' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.)
விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு நீங்காத உறவினம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் ; அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அது அவனுக்கு மேன்மேலுங் கிளரும் பல்வகைச் செல்வத்தை உண்டாக்கும்.
அன்பார்ந்த உறவினர் பல்வகைச் செல்வத்தையுங் காத்து வளர்ப்பராதலின் , 'ஆக்கம் பலவுந் தரும்' என்றார் . 'உற்றோரெல்லாம் உறவின ரல்லர்' . ஆதலின் , 'விருப்பறாச் சுற்றம்' என்றும் , மேன்மேற் கிளைத்து வளருஞ் செல்வத்தை 'அருப்பறா வாக்கம்' என்றும் கூறினார் . 'இயையின்' என்பது இயைதலின் அருமை குறித்து நின்றது . அரும்புதல் - தோன்றுதல் . விரும்பு - விருப்பு . அரும்பு - அருப்பு. ஆக்கம் தொழிலாகுபெயர்.
கலைஞர் உரை:
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக்
கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக
அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அடிக்கடி சந்திக்காவிட்டாலும் மனத்தில் அன்புவிட்டுப் போகாதிருந்தால்) விருப்பம் விட்டுப்போகாத உறவு ஈரம் அற்றுப் போகாத மரம் புதுப்புதுத் தளிர்விடுவதைப் போல் புதுப்புது நன்மைகளை உண்டாக்கிக் கொண்டேயிருக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்கு உண்டாகி விடுமானால், அது அவருக்குக் கிளைத்தல் நீங்காத பல செயல்களையும் தரும்.
Translation
His joy of life who mingles not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound.
Explanation
The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.