உலகத்தமிழ் நிகழ்வுகள்
அமெரிக்காவில் மிச்சிகனில் நூலகத்திற்கு 200 தமிழ்ப் புத்தகங்கள் நன்கொடை
'புத்தகங்கள் படிப்பதையே வழக்கம் ஆக்குங்கள்' என்றார் அப்துல் கலாம். இதோ தமிழ்ப் புத்தகங்கள் படிப்பதைப் பழக்கமாக்க முயற்சி! தமிழர்கள் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அரிய முயற்சி . அமெரிக்காவில் மிச்சிகனில் பார்மிங்டன் என்ற இடத்திலுள்ள நூலகத்திற்கு 200 தமிழ்ப் புத்தகங்கள் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி. இதனுடைய மொத்த மதிப்பு தோராயமாக 920 வெள்ளிகள். இது ஒரு சிலரின் முயற்சியாகவும் பங்களிப்பாகவுமில்லாமல், இதில் தமிழ் அன்பர்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்று விரும்பியபடியால் மிச்சிகன் மாகாணத்தில் தோராயமாக வசிக்கும் ஐயாயிரம் தமிழ்க் குடும்பங்களில் ஒரு நூறு குடும்பங்கள் ஆளுக்கு $10 மட்டும் கொடுத்தால் இந்த நூலகத்திற்குத் தேவையான தொகை கிடைத்துவிடும் என்ற நோக்கில் நன்கொடைகள் பெறப்பட்டன. இந்த முயற்சிக்கு மிச்சிகன், அமெரிக்கா என்றில்லாமல் மாநிலம், நாடு கடந்து ஆதரவு கரம் நீண்டதால் , அவர்கள் நினைத்த தொகையை 4 நாட்களில் ஈட்டி உள்ளனர். மிச்சிகன் தமிழ் ஆர்வலர்கள் குழு இந்த நிகழ்வை எளிமையாகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த முயற்சி ஒரு நூலகத்தோடு முடிந்து விடாமல் இனிவரும் காலங்களில் மிச்சிகனில் உள்ள பெரும்பாலான நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்கள் கொண்டு சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என்று தமிழ் ஆர்வலர்கள் குழு உறுதியளித்தது சிறப்பு.
|