உணவு கட்டுப்பாட்டின் மூலம், சர்க்கரை நோயை கட்டுபடுத்த முடியும் என லண்டனை சேர்ந்த, ரிச்சர்டு டவுடி என்பவர் நிரூபித்து காட்டியுள்ளார்.
லண்டன் நகரத்தை சேர்ந்தவர், ரிச்சர்டு டவுடி, இவர் சில நாட்களுக்கு முன்பு, தனது ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ள, மருத்துவமனை ஒன்றில் பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதால், அதிர்ச்சி அடைந்தார். தன் பரம்பரையிலும், யாருக்கும் இந்நோய் ஏற்பட்டதில்லை என்றும், அதிக இனிப்புகளை உட்கொள்ளும் பழக்கமும் இல்லை என்றும், டாக்டரிடம் ரிச்சர்டு தெரிவித்தார்.அதிகப்படியான கலோரிகள் உடைய உணவுப் பொருட்களை உட்கொண்டதாலேயே, ரிச்சர்டின் ரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து சர்க்கரை நோயை குணப்படுத்துவது தொடர்பாக , ரிச்சர்டு இணையதளத்தில், தீவிர தேடலில் இறங்கினார். அப்போது, "குறைந்த கலோரிகள் உடைய உணவை உட்கொள்வதின் மூலம், 8 வாரங்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்' என, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் வகுத்த, அட்டவணைப்படி, தினசரி உணவை உட்கொள்ள ரிச்சடு திட்டமிட்டார். அதன் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு 800 கலோரிகளை தரும் உணவை மட்டுமே உட்கொள்ள ரிச்சர்டு திட்டமிட்டார். வழக்கமான உணவுகளுக்கு பதிலாக, 600 கலோரிகளை மட்டுமே உடைய, பழச்சாறுகள், கீரை வகைகள் மற்றும், 200 கலோரிகளை உடைய, பச்சை காய்கறிகளை மட்டுமே சாப்பிட தொடங்கினார். ஒரு நாளைக்கு, மூன்று லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் குடித்தார். 11 நாட்கள் தொடர்ந்து இந்த உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்ட ரிச்சர்டு, தன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, மீண்டும் நிலைப்படுத்தினார். இந்த நிகழ்வு உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
|