மாணவர்களுக்கு இணையதளம் மூலம், இலவசமாக திறந்த நிலைக் கல்வியை வழங்க இங்கிலாந்து பல்கலைக் கழகங்கள் முடிவு செய்துள்ளன. இந்த தொலைதூர கல்வியை மாணவர்கள், வீட்டில் இருந்த படியே, மொபைல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் பெறலாம். இந்த புதிய கல்வித்திட்டங்களுக்கான பாடத்திட்டங்கள், இணைய தளத்திலேயே கிடைக்கும். இப்புதிய பாடதிட்டங்களை, பர்மிங்காம், நாட்டிங்காம், வார்விக், பிரிஸ்டல் உள்ளிட்ட பல்கலைக் கழகங்கள், தயாரித்துள்ளன. திறந்த நிலை கல்வி மூலம், ஆன்லைனில் இலவசமாக வழங்கப்படும், இப்பாடத்திட்டத்தில், 20 விதமான, குறுகிய பாடத்திட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இதில், எட்டு திட்டங்கள், இந்த ஆண்டு முதல் துவங்கப்படுகின்றன. இதன் மூலம், 20 ஆயிரம் மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இப்புதிய பாடத்திட்டங்களில் சேர்ந்து பயிலும் மாணவ மாணவியருக்கு வினாக்கள், சோதனை ரீதியாக, பன்னோக்கு அடிப்படையில் கேட்கப்படும். இதற்கு, எவ்விதமான முன் கல்வித்தகுதியும் தேவையில்லை. இந்த கல்வியை பெறும் மாணவர்களுக்கு எவ்விதமான சான்றிதழ்களும் அளிக்கப்படமாட்டாது. இருப்பினும், பல்கலைக் கழகங்களில் படித்த அனுபவமும், அறிவும் மாணவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே கிடைக்கும். இந்த இலவசமாக திறந்த நிலைக் கல்வி கடந்த 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|