தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.)
தீவினை என்னும் செருக்கு-தீவினை என்று சொல்லப்படும் இறுமாப்பிற்கு; தீவினையார் அஞ்சார். தீவினை செய்து பழகிய தீயோர் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-ஆயின் அதைச் செய்தறியாத சீரியோர் அஞ்சுவர்.
தீவினைக்குக் கரணியமான இறுமாப்பு தீவினை யென்னும் கருமியமாகச் சார்த்திக் கூறப்பட்டது. அஞ்சாமை மனச்சான்றின் மழுக்கத்தாலும் அச்சம் அதன் கூர்மையாலும் ஏற்படுவனவாம்.
கலைஞர் உரை:
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி
ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிறருக்குத் தீங்கு செய்வதனால், தமக்கு வரக்கூடிய பாவம் என்னும் ஒரு வல்லமையுள்ள சத்திக்கு, தீங்கு செய்யும் இயல்புள்ளவர்கள் அஞ்சுவதில்லை; ஆனால் நல்லவர்கள் அதற்கு அஞ்ச வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தீய செயல் என்னும் செருக்குடைய அறியாமைக்கு தீவினையாளராகிய தீச்செயல் நெஞ்சங்கொண்டவர்கள் அஞ்சமாட்டார்கள். சீரிய சிறப்புடையவர்கள் அஞ்சப் படுவார்கள்.
Translation
With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.
Explanation
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.