|
|||||
வெள்ளை சேலை கட்டி பொங்கல் கொண்டாடிய தமிழ் பெண்கள் |
|||||
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி மக்கள் இந்தமுறை மாட்டு பொங்கல் விழாவை, வழக்கம்போல் சிறப்பாக கொண்டாடினர். இவர்களின் இந்த பொங்கல் விழா, பெரும்பாலானோரை ஈர்த்தது.
பல்வேறு இடங்களில் தாங்கள் வளர்க்கும் மாடுகளை நீராட்டி, குங்கமம் இட்டு, பூஜை செய்து பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இதனையொட்டி மாடுகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள பிணைப்பை பறைச்சாற்றும் வகையிலே ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சு விரட்டு, எருது விடும் விழா போன்ற விளையாட்டுகளிலும் நம்முடைய வாழ்வியலில் உள்ளன.
ஸ்பெஷல் பொங்கல்
அந்தவகையில், வருடந்தோறும் சிவகங்கை அருகே மதகுபட்டியில் நடக்கும் பொங்கல் விழாவானது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.. இங்கு மேலத்தெரு, கீழத்தெரு, சலுகைபுரம் பகுதிகளில் குறிப்பிட்ட சமூகத்தினர் ஏராளமானோர் வசிக்கின்றனர்.
பச்சநாச்சி பிடாரி அம்மன், பொன்னழகி அம்மன் ஆகியோர்தான் இம்மக்களின் குல தெய்வம் ஆவர்.. எந்த ஒரு பண்டிகை என்றாலும் இவர்களை வழிபடுவது வழக்கம்.. குறிப்பாக, மாட்டுப்பொங்கலன்று கோயில் முன்பு பொங்கலிட்டு இம்மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
மெட்டி, கொலுசு
இந்த மாட்டு பொங்கல் விழாவுக்காக, 15 நாட்கள் முன்பிருந்தே பிரத்யேகே விரதம் கடைபிடிக்கின்றனர். 15 நாட்கள் விரதத்துக்கு பிறகு, பிடாரி அம்மன் கோயிலில் பொங்கல் வைக்கும் வைபத்தை துவங்குவார்கள்.
அப்படி பொங்கல் வைக்க வரும் பெண்கள், வளையல், மெட்டி, கொலுசு போன்ற ஆபரணங்களை தவிர்த்து, வெறும் வெள்ளை சேலை கட்டி வருவார்கள்.. அனைவரும் ஒன்றாககூடி, ஒற்றுமையுடன் சேர்ந்து, ஒரேஇடத்தில்தான் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
அப்படித்தான் இந்த முறையும் 15 நாட்கள் விரதமிருந்து, மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.
ஒரு எலுமிச்சை பழம் ரூ. 40 ஆயிரம்
வெள்ளை புடவையுடன் வரிசையாக வந்த பெண்கள், ஒரே இடத்தில் கூடி, அங்கேயே பொங்கலும் வைத்தனர். மேலும் கரும்புகளில் தொட்டில் கட்டி பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனுக்கு நேர்த்திக்கடனையும் அப்பெண்கள் செலுத்தினர்.. அப்படி செலுத்திய தொட்டில் கரும்புகள், அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை உள்ளிட்ட பொருட்கள் கோயில் வாசலில் கூடி பொங்கலிட்ட பிறகு, இறுதியில் ஏலம் விடப்பட்டது...
அவை பல ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.. அதாவது, ஒரு எலுமிச்சை பழம் 40 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கரும்பின் விலை 17 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், விற்பனையாகி உள்ளது. ஒரு எலுமிச்சம்பழத்தை ஜெயக்குமார் என்பவர் 40,001 ரூபாய்க்கும், ஒரு கரும்பு 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தாராம்.
வெள்ளை புடவை
இந்த நிகழ்வு குறித்து அவர்கள் சொல்லும்போது, "பண்டைய காலத்தில் இருந்தே இப்படி ஒரு நடைமுறை இங்கு உள்ளது.. வசதி படைத்தோர், ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல், இந்த பொங்கல் விழாவை சிறப்பிக்க வேண்டும் என்பதற்காகவே, நகைகளோ அல்லது உயர்ந்த ரக ஆடைகளையோ உடுத்துவது தவிர்க்கப்பட்டு வருகிறது.
எங்கள் தெய்வங்களுக்கு முன்பு அனைவரும் சமம் என்பதற்காக அணிகலன்கள் அணியாமல் ஒரே மாதிரியாக வெள்ளை நிற உடையணிந்து பொங்கல் வைப்போம். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே விரதம் இருக்க தொடங்கி விடுவோம். வெள்ளை சேலை ஏலம் எடுப்போருக்கு நினைத்த காரியம் நடப்பதால் ஆண்டுதோறும் ஏலத்தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.
சாமிக்கான பொருட்களை ஏலம் எடுத்துச் சென்றால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது நம்பிக்கை. அதனால் வேண்டிய பொருட்களை பல ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கிறோம்" என்று விளக்கமும் கொடுத்தனர்.
இந்த 15 நாட்கள் விரதம் இருக்கும்போது, அசைவம் சாப்பிடாமல் இருப்பதுடன், அந்த 15 நாட்களுமே வெள்ளை சேலை அணிந்தும், காலில் கொலுசு, கையில் வளையல் இல்லாமல் இருப்பார்களாம். ஆனால் நெற்றியில் மட்டும் குங்குமம் வைப்பார்களாம்.
அபசகுணம்
பிறகு, சாமியாடி வீடு வீடாக சென்று பொங்கல் வைக்க அழைப்பு விடுப்பார்கள்.
இறுதியில், பொங்கல் பானை, பூஜை பொருட்களுடன் வெள்ளை சேலை அணிந்த பெண்கள் கோவிலுக்கு சென்று, குலதெய்வங்களுக்கு வெண் பொங்கல் பொங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
"வெள்ளை நிறத்தை அபசகுணம் என்பார்கள், ஆனால், எங்கள் தெய்வத்திற்கு வெள்ளை சேலை தான் உகந்தது, இந்த வழிபாட்டை 9-வது தலைமுறையாக கடைபிடிக்கிறோம்" என்று பெருமையுடன் சொல்கிறார்கள் இப்பெண்கள். |
|||||
by Kumar on 17 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|