"சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். ஆனாலும் மாணவர்களிடம் போட்டிகளில் பங்கேற்கும் பேரார்வம் தற்போது அதிகம் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் இளையர்கள் மேற்கோள்களாக திருக்குறளையும் ஔவைப் பாடல்களையும் அறநெறிக் கருத்துகளையும் தன் உரைக்குச் சான்றாக, ஆதாரங்களாக எடுத்து விளக்கிப் பேசுவதை அதிகமாகக் காணமுடிகிறது. இத்தகைய விழுமியங்களைப் பிஞ்சு நெஞ்சில் விதைக்கவும் ஆரோக்கியமான மனநிலையை இளையர்களிடம் வளர்க்கவும் இப்போட்டிகள் உபாயமாகின்றன. பாட்டுப் போட்டிகளில் பத்துவயதுப் பிள்ளைகள்கூட 1950களில் வெளிவந்தப் பாடல்களை ரசித்து உள்வாங்கி பாவனை வெளிப்படப் பாடுகிறார்கள். இந்நிலை ‘இறைச்சல்தான் இசை’ என்னும் இன்றைய மனப்போக்கை மாற்ற உதவும் என்று கருதுகிறேன். நுண்கலைகளைக் ( Fine arts) கற்போர் எண்ணிக்கை கூடியுள்ளதும் இதற்கொரு காரணமாக இருக்கலாம். பாட்டு, பேச்சு, நடிப்புப் போட்டிகள் எதுவாயினும் கலையை கலையாக மட்டும் கருதும் மேற்கத்திய நிலையில் ‘கலா லாவண்யம்’ மட்டுமே முதன்மையாகிறது. ஆனால் எந்த கலையாயினும் அதன் வழி அறக்கோட்பாட்டைக் கலந்தே கொடுக்கும் நம் தமிழ்ச் சமூகத்தில் அத்தனையும் விதையாய் இளையோர் மனங்களில் விழுகிறது. போட்டிகள் வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதும் சாந்த நிலையைத் தருவதுடன் ஆளுமைப் பண்பை வளர்க்கும் கருவியாகவும் விளங்குகிறது என்பதனைப் பெற்றோர்களும் உணர்ந்துள்ளனர். வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப்பதவி கொள்வார்-மகாகவி பாரதி!
|