|
||||||||
தைப்பூசமும் இராமலிங்க அடிகளாரும் !! |
||||||||
ஜீவகாருண்யம் என்றாலே நினைவுக்கு வருவது திரு அருட்பா எழுதிய இராமலிங்க அடிகளார் தான். ஜீவகாருண்யம் என்றால் என்ன? அது ஒரு உயர்ந்த கொள்கை. இன்றைய இளைஞர்கள் இதைப்பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். புலால் உணவை மறுத்தல், தெய்வத்தின் பெயரால் உயிர்பலியை தவிர்த்தல், எந்த காரணத்துக்காகவும் பிற உயிரைக் கொல்லாமை, எந்த உயிரையும் தன் உயிர்போல் மதித்தல், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருத்தல், சாதி சமய வேறுபாடு இல்லாமல் வாழ்தல், எதிலும் நேர்மையான ஒரு பொது நோக்கம் வேண்டும், கடவுள் ஒருவரே அவர் ஜோதி வடிவானவர் என்பதே அவர் கொள்கைகள். அவர் நம் தமிழ் நாட்டில் பிறந்தது நமது நாட்டுக்கே பெருமை. தமிழர்களாகிய நமக்கும் பெருமை. "வாடிய பயிரைக் கண்டு நான் வாடினேன்" என்று வருந்தியவர். மனதில் அன்பும் இரக்க உணர்வும் இருந்தால் தான் இதை உணர முடியும். பேசும் சக்தி இல்லாத நெற்பயிர் தண்ணீர் இல்லாமல் வாடுவதைக் கண்டு வருந்தினார் என்றால் எந்த அளவுக்கு அவருக்கு இளகிய மனம் இருந்திருக்கும் மனிதர்களாகிய நாம் உணர வேண்டும்.
அவர் சென்னையில் பாரிமுனை கந்த சாமி கோயில், திருவொற்றியூர் ஆதி புரீஸ்வரர், ஒற்றீசர், வடிவுடை அம்மன் ஆகிய தெய்வங்களை மனமுருகித் தொழுதவர். ஆனால் ஒரு -- மனம் பக்குவப்பட்டு மிக முதிர்ந்த - நிலைக்குப் பிறகு "ஒளியே தெய்வம்" என்று நம்பினார். அவர் எழுதிய "திரு அருட்பா" அன்பு, இறைவன், ஜோதி வடிவானவன்" என்பதை அடிப்படையாகக் கொண்டது.
"அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி" "எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து" என்பவை அவரின் வைர வரிகள். ஜோதி வடிவான இறைவன் பெரும் கருணை கொண்டவன் என்பது முதல் சொற்றொடரின் பொருள். (அம்பலம் - சிதம்பரம்; ஏத்து - வணங்கு) நான் சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன், வல்லமை வாய்ந்த அவரை வணங்குவோருக்கு நினைத்தது எல்லாம் நடக்கும்" என்பது இரண்டாம் சொற்றொடரின் பொருளாகும்.
அவர் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் வேறு யாராலும் உணர முடியாதது. சென்னையில் வாழ்ந்தபோது அவர் வணங்கிய "கந்த கோட்டத்து முருகன்" இராமலிங்க அடிகளாருக்கு நிலைக்கண்ணாடியில் காட்சியளித்தார். கருங்குழி என்ற கிராமத்தில் வாழ்ந்தபோது இரவில் இறைவனைப் பற்றி பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தபோது எண்ணெய் இல்லாமல் விளக்கின் திரி கருகியபோது தண்ணீரை எண்ணெய் என்று நினைத்து ஊற்றியபோது இரவு முழுவதும் தண்ணீரால் விளக்கு எரிந்தது. 25 – 01 – 1872 அன்று ஒரு தைப்பூச நன்னாளில் நெய்வேலி அருகில் உள்ள வடலூரில் இராமலிங்க அடிகளாரால் தொடங்கப்பட்ட “சத்திய ஞான சபை”யின் திருவிளக்கு வழிபாடு இன்று வரை தொடர்கிறது. அன்று அவர் ஏற்றிய விளக்கு இன்று வரை “அணையா விளக்காக” தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அவர் தொடங்கிய நித்திய அன்னதானம் இன்று வரை அங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய பெருமைகள் நிறைந்த அடிகளார் 30 – 01 – 1874- ஆம் வருடம் தை மாதம் 19- ஆம் நாள் தைப்பூசத் திருநாளில் நள்ளிரவு 12 மணிக்கு சித்தி வளாகத் திரு மாளிகையில் அவருடைய உடலும் உயிரும் ஜோதியில் (விளக்கு ஒளியில்) கலந்தது. அவருடைய "உண்மையான பக்தியால் மரணமில்லாப்பெருவாழ்வு பெற்றார்". அவருடைய நினைவு நாளான தைப்பூச நாள் முதல் அவருடைய "ஜீவகாருண்ய கொள்கைகளில் சிலவற்றையாவது கடைபிடிப்போம், அவர் வழிகாட்டியபடி ஜோதி வடிவான இறைவனை வணங்குவோம், வாழ்வில் வளம் பெறுவோம்".
ஜோதிடர் பலராமன் |
||||||||
by Swathi on 29 Jan 2012 0 Comments | ||||||||
Tags: தை பூசம் தைப்பூசம் இராமலிங்க அடிகளார் Ramalinga Adigalar Thaipusam | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|