தினமும் துணி துவைத்து கஷ்டப்படும் நல்ல உள்ளங்களுக்கு ஒரு நற்செய்தி. விரைவில் தானாகவே துவைத்துக் கொள்ளும் வசதி உடைய துணி வரப்போகிறதாம். அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த விஞ்ஞானிகளுள் ஒருவரான, தாவுரங் என்பவர் தான இந்த புதிய வகை துணியை கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ஐந்து ஜோடி சீருடை வழங்கப்படுகிறது. காடு, மலை, பாறைகள் என்று பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்கள் உடைகளை' பணியிடங்களில் துவைத்துக் கொள்ள போதுமான வசதிகள் இருப்பதில்லை. இதனால் பல வீரர்கள் அழுக்குத் துணியோடு இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதையடுத்து ராணுவ வீரர்களுக்கு துவைக்க வேண்டிய அவசியம் இல்லாத துணியை கண்டறிந்தால் என்ன என்ற சிந்தனை எனக்கு தோன்றியது. அதன் வெளிப்பாடாய் தற்போது இந்த புதிய துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை துணிகள்,‘‘ஓம்னி போபிக் கோட்டிங்’’ என்ற வகை ரசாயன பூச்சு கலந்து நெய்யப்பட்டுள்ளது. இந்த பூச்சு பூசப்பட்ட துணியில் தயாரிக்கப்பட்ட ராணுவ சீருடையை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தினாலும் அழுக்கு ஆகாது. மேலும் கிரீஸ், சேறு போன்ற கறைகள் பட்டாலும், சீருடையை கழட்டி உதறினால் அதுவும் போய்விடும். அதே போல உடம்பில் எந்த மட்டமான துர்நாற்றம் இருந்தாலும் அதுவும் சீருடையில் காட்டாது. சீருடை நறுமணத்தோடு இருக்கும் எனவும், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ரசாயன கலவையால் உடல் நலத்துக்கு எவ்வித பிரச்னையும் வராது எனவும் தாவுரங் தெரிவித்துள்ளார். இந்த துணியானது தனக்குத்தானே சுத்தம் செய்து கொள்ளும் வகையில் அதாவது கழட்டி உதறினால், துவைத்தது போன்ற புத்துணர்வோடு சீருடை காணப்படும் என்றார்.
|