|
|||||
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு இதழுக்காக 1,500 ஆராய்ச்சி கட்டுரைகள் வந்துள்ளன - சோமசுந்தரம் இளங்கோவன் தகவல் |
|||||
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு இதழுக்காக 1,500 ஆராய்ச்சி கட்டுரைகள் வந்துள்ளன என்று ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் இளங்கோவன் கூறினார். பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதை அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. கடந்த 1971 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சோமசுந்தரம் இளங்கோவன் என்பவர் இந்த விழாவை ஒருங்கிணைத்து நடத்துகிறார். மாநாடு பற்றி அவர் கூறியதாவது: “ பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அறிஞர் அண்ணா நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு நான் சென்று இருந்தேன். அப்போதில் இருந்தே இந்த மாநாடு மீது எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்காவில் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பதே என் ஆசை. முன்னதாக 9-வது மாநாடு மலேசியாவில் நடக்கும் போது உலகத் தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் மாரிமுத்துவை சந்தித்தேன். அவரை எனக்கு 30 வருடங்களுக்கு மேலாகத் தெரியும். அவரை நேரில் பார்க்கும் போது அமெரிக்காவிலும் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அதன் முடிவில்தான் தற்போது சிகாகோவில் மாநாடு நடைபெற உள்ளது. இது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்பதோடு நிற்காமல், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் 32-வது ஆண்டு விழா, உலக தமிழ் முதலீட்டாளர்கள் மாநாடு என அனைத்தும் இணைந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய மூன்று அமைப்பிலும் உள்ள உறுப்பினர்கள் இணைந்து ஒரு குழுவை உருவாக்கினோம். அதன்பின் அந்த குழுவின் தலைவராக என்னை நியமித்து விழாவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படக் கூறினார்கள். நாங்கள் அனைவரும் இணைந்து பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி விழா ஏற்பாட்டுக்கான அனைத்து விஷயங்களையும் பேசி தீர்மானித்தோம். இந்த ஆண்டு விழா முடிந்தபிறகு வெளியாகும் இதழுக்காகப் பல தலைப்புகளைத் தீர்மானித்து உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு அனுப்பினோம். அவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளாக சுமார் 1500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்துள்ளன. அதில் சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து இதழில் வெளியிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Mani Bharathi on 04 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|