கடந்த 1941ம் ஆண்டு, அட்லாண்டிக் கடலில் மூழ்கிய பிரிட்டிஷ் - இந்திய கப்பலில் இருந்து 110 டன் எடையுள்ள வெள்ளி கிடைத்துள்ளது.
இந்தியாவை, ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது, 1941ம் ஆண்டு, கோல்கட்டாவிலிருந்து, 198 டன் எடையுள்ள வெள்ளி கட்டிகளுடன் எஸ்.எஸ்.கார்சோப்பா என்ற பெயருடைய சரக்கு கப்பல், அயர்லாந்துக்கு புறப்பட்டு சென்றது. அப்போது இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஜெர்மனியின் கடல் வழி தாக்குதலால், எஸ்.எஸ்.கார்சோப்பா கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் மூழ்கியது. இந்தக் கப்பலை தேடும் பணிக்கான ஒப்பந்தத்தை, பிரிட்டிஷ் அரசு ஒடிசி நிறுவனத்திடம் கடந்த 2010ம் ஆண்டு ஒப்படைத்தது. 2012ம் ஆண்டு முதல், மூழ்கிய சரக்கு கப்பலை தேடும் பணியில், ஒடிசி நிறுவனம் ஈடுபட்டது.இந்நிலையில் எஸ்.எஸ்.கார்சோப்பா, கப்பலின் உடைந்த பகுதிகள், வட அட்லாண்டிக் கடலில், மூன்று மைல் ஆழத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மூழ்கிய கப்பலில் இருந்து, 1,574 வெள்ளி கட்டிகள் மீட்கப்பட்டு உள்ளன. 110 டன் எடையுள்ள இந்த வெள்ளி கட்டிகளில், 80 சதவீதம் ஒடிசி நிறுவனத்தை சேரும்.இந்த வெள்ளி கட்டிகள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதால், இதற்கு உரிமை கோரும் உரிமை இந்தியாவுக்கு உள்ளதாக, சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாகிஸ்தானும், வங்கதேசமும் கூட இந்த வெள்ளிக்கு உரிமை கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|