|
|||||
ஆடிப்பெருக்கின் சிறப்புகள் ! |
|||||
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு பணியை தொடங்குவார்கள். தமிழகத்தில் உள்ள காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள்.
ஆடிபெருக்கு பூஜை செய்வது எப்படி?
தமிழக நதிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. அனைவருமே ஆடி பெருக்கை கொண்டாட வேண்டும். ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். முதலில் அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். பிறகு அதில் நிறைகுடத்திலிருந்து நீர் ஊற்றவும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும் மஞ்சள் நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். மஞ்சள் நீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். சாமி படங்களுக்கும், மஞ்சள் நீருக்கும் கற்பூர ஆரத்தி காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டிக்கொள்ளவும். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை வீட்டில் உள்ள செடி, கொடி, மரங்களில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யது நன்று. இப்படி செய்தால், நம் வீட்டில் செல்வம் பெருக்கெடுத்து ஓடும் என்பது ஐதீகம்.
ராமபிரான் காவரியில் நீராடிய நன்னாள் :
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பிறகு, அந்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். அதற்கு வசிஷ்ட முனிவர், தட்சிண கங்கை என்று அழைக்கப்படும், காவிரியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும் என ராமபிரானிடம் கூறினார். அதன் படி ராமபிரான் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கில் நகை வாங்கினால் நல்லதா ?
பொதுவாக ஆடி மாதத்தில் புதிய பொருட்களை வாங்கவோ, புது தொழில் தொடங்கவோ மாட்டார்கள். ஆனால் ஆடி பேருக்கு மட்டும், இதற்கு விதிவிலக்காகும். அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க சிறந்த நாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோன்று இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை.
காவிரிக்கு, ஸ்ரீரங்கநாதர் சீர்வரிசை அளிக்கும் நாள் :
ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும், ஸ்ரீ ரங்கநாதர், ஆடிபெருக்கு அன்று, ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தின் படித்துறையில் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு அபிசேக ஆராதனைகள் நடந்து முடிந்ததும்.அன்று மாலை வரை அங்கேயே இருப்பார். பிறகு பட்டு புடவை, திருமாங்கல்யம், வெற்றிலைபாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலிருந்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவார்கள். ஸ்ரீரங்கநாதர் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள். காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் காட்சியை கண்டால் கோடி புண்ணியம். |
|||||
by Swathi on 02 Aug 2013 2 Comments | |||||
Tags: ஆடிபெருக்கு ஆடி திருவிழா ஆடிபெருக்கு பூஜைகள் காவிரி ஆடி Aadi Aadi Festivals | |||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|