LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 372 - ஊழியல்

Next Kural >

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இழவு ஊழ் (உற்றக்கடை) பேதைப்படுக்கும் -ஒருவன் தன்செல்வத்தை இழத்தற்குக்கரணகமான தீயூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்துணைப்பேரறிஞனாயிருந்தாலும் அவனைப் பேதையாக்கும்; ஆகல்ஊழ் உற்றக்கடை அறிவு அகற்றும்-இதற்கு மாறாக, அவனுக்குச் செல்வஞ் சேர்வதற்கேற்ற நல்லூழ் வந்துற்ற விடத்து, அது அவன் எத்துணைப் பேதையாயிருந்தாலும் அவனைப் பேரறிஞனாக்கும். செல்வம் என்பது அதிகாரத்தால் வந்தது. 'இழவூழ்', 'ஆகலூழ்' என்பன 4-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. உற்றக்கடை என்பது இறுதிநிலை விளக்கணி. மேற்கூறிய முயற்சிக்கும் சோம்பற்கும் ஏதுவான நிலைமைகள் இங்குக் கூறப்பட்டன.
கலைஞர் உரை:
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
கைப்பொருளை இழக்கவேண்டிய தீவினைப் பயன்கள் வரும்போது உள்ள அறிவையும் கெடுத்துவிடும்; நல்வினைப் பயன் வரும்போது புதுப்புது யோசனைகளைக் கொடுத்து அறிவை அதிகப்படுத்தும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது, அது அந்த அறிவினைப் போதையாக்கும். இனி, அவன் அறிவு சுருங்கி இருந்தாலும் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது அது அவ்வறிவினை விரிக்கும்.
Translation
The fate that loss ordains makes wise men's wisdom foolishness; The fate that gain bestows with ampler powers will wisdom bless.
Explanation
An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.
Transliteration
Pedhaip Patukkum Izhavoozh Arivakatrum Aakaloozh Utrak Katai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >