மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் தற்போது பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.
இந்த படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் கமலஹாசனும், மீனா கதாபாத்திரத்தில் கௌதமியும் நடிக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன், கவுதமி இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை தமிழ் :
சென்னைத் தமிழ், கொங்கு தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் பேசிய கமல் இதில் நெல்லைத் தமிழ் பேசுகிறார். கதை முழுக்க திருநெல்வேலியை மையமாகக் கொண்டு நிகழ்வதால் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் அனைவருக்கும் நெல்லைத் தமிழ்தான் பேசுகிறார்கள்.
கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்ட இந்த படத்தில் கமலை வேஷ்டி கட்டிய இளமையான தோற்றத்தில் பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.
'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ஜார்ஜ் குட்டி. ‘பாபநாசம்' படத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு சுயம்புலிங்கம் என்கின்றனர்.
இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் ப்ரணவ் அறிமுகமாகிறதார். இவரது பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாதாரண நடுத்தரவர்க்கத்து குடும்பத்தினராக வாழ்ந்துள்ளாராம் கமல், பஸ் பயணம், குடும்ப சிக்கல்கள், பெண் குழந்தைகளுடனான புரிதல் என பாபநாசத்தில் உண்மையாகவே வாழ்ந்திருக்கிறாராம். மகளின் பிரச்சினைகளுக்கு என்ன மருந்து போடுவது என்று அவர் தவிக்கும் தவிப்பிற்கு இந்த படமே சாட்சி.
இந்தப் படத்தில் இளவரசு, கலாபவன் மணி ஆகியோர் போலீசாக நடித்திருக்கின்றனர். கலாபவன் மணி கமலுடன் எப்படியாவது நடித்தே ஆகவேண்டும் என்பதற்காக தேடிச்சென்று கமலை சந்தித்து வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாபநாசத்தில் போலீஸ் ஐ.ஜியாக ஆஷா சரத்தும், கமலின் மூத்த மகளாக ஜில்லாவில் நடித்த நிவேதா தாமஸும், இளைய மகளாக த்ரிஷ்யம் படத்தில் நடித்த எஸ்தரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நா.முத்துக்குமார் பாடல்களை எழுதியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் கமலும் ஒரு சில பாடல்களை எழுதி, பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் இயக்குகிறார். படம் விரைவில் வெளியாக உள்ளது என்கின்றனர்
மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் ஹிட்டடித்த 'த்ரிஷ்யம்' தமிழிலும் பட்டையைக் கிளப்புமா என்பதை படம் வெளியாகும் போது தான் தெரிந்துகொள்ள முடியும்.
|