ஆயுதப் போட்டியைத் தவிர்த்து நாட்டு மக்களிடையே அமைதியை ஏற்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது ராணுவ செலவை குறைத்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், நிருபர்களிடம் பேசியதாவது: இந்தியா, பாகிஸ்தான் இடையே ஆயுத போட்டி இருக்கும் வரை, அமைதி என்பதற்கே இடம் இல்லை. எனவே இந்தியாவும், பாகிஸ்தானும், ராணுவ செலவை கணிசமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். போரினால், பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி மக்கள் தான். காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானில் உள்ள அனைத்து கட்சிகளின் விரிவான ஆலோசனைக்கு பிறகு தான், ஒரு முடிவு மேற்கொள்ளப்படும். அண்டை நாட்டு விஷயத்தில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை, நாங்கள் ஆப்கானிஸ்தான் விஷயத்தில் கடைபிடித்து வருகிறோம். ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால், ஈரானிலிருந்து, பைப் லைன் மூலம் எரிவாயுவை பாகிஸ்தான் பெற்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா, பாகிஸ்தானை எச்சரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் முஷாரப் வழக்கு பற்றி அவரிடம் கேட்ட போது, அதை பற்றி பேச விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.
|