|
|||||
ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் வீர விளையாட்டை உலகில் எங்கும் பார்த்தது இல்லை!” - வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெருமிதம். |
|||||
‘ஜல்லிக்கட்டு போன்ற ஒரு வீர விளையாட்டை உலகில் வேறு எந்த நாட்டிலும் நாங்கள் பார்த்ததில்லை, ’’ என்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வியந்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் பார்க்க வருவதாலே இந்தப் போட்டி உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்று கூறப்படுகிறது. 17/01/2024 அன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண, அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு வெளிநாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டு ரசித்து புகைப்படங்களும், வீடியோவும் எடுத்து மகிழ்ந்தனர். போட்டியைப் பார்த்துவிட்டு, அலங்காநல்லூர் கிராமத்தை ஒவ்வொரு தெருவாகச் சென்று சுற்றிப்பார்த்து, இந்தக் கிராமத்தின் பாரம்பரியத்தையும், ஜல்லிக்கட்டு போட்டியின் வரலாற்றையும் தங்கள் சுற்றுலா வழிகாட்டிகள் துணையுடன் கிராம மக்களிடம் பேசி தெரிந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பேட்ரிக் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகை நாட்களில் மதுரைக்கு ஜல்லிக்கட்டு பார்க்க வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். எத்தனைமுறை இந்தப் போட்டியையும், இந்த ஊரையும் பார்க்கப் பார்க்க, மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. தற்போது 9-வது முறையாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்துள்ளேன்.
தமிழர்களைப் பெருமையாகக் கருதுகிறோம்
ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டை உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நாங்கள் பார்த்ததில்லை. உயிரை பணையம் வைத்து, காளையை அடக்கும் இந்தப் போட்டி நிச்சயமாக மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆசிரியமாகவும் இருக்கிறது, ’’ என்றார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல், மிட்சல் தம்பதியினர் கூறுகையில், ‘‘பார்க்கவே மிக த்ரில்லாக உள்ளது. காளைகள் பார்க்க அழகாகவும், அதேநேரத்தில் அவிழ்த்துவிட்டதும் ஆக்ரோஷமாகவும் மாறிவிடுகின்றன.
தடகளப் போட்டிகளில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது அந்தப் போட்டி தொடங்கியது முதல் முடியும் வரை விறுவிறுப்பாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கும். அதுபோல், ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு முறையும் காளை வரும்போது அது அடக்கப்படுமா? அடக்கப்படாதா? என்ற எதிர்பார்ப்பும், சுவாரசியமும் உள்ளது. வீரத்துக்கு எடுத்துக்காட்டாக நடக்கும் இந்தப் போட்டி நிச்சியமாகப் பாராட்டப்பட வேண்டியது, தமிழர்களைப் பெருமையாகக் கருதுகிறோம்’’ என்றனர். |
|||||
by Kumar on 20 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|