நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள். |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
(பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள் - என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள். (கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.) |
மணக்குடவர் உரை: |
தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள். இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று. |
தேவநேயப் பாவாணர் உரை: |
(தலைமகன் பாங்கற் கூட்டத் திறுதிக்கட் சொல்லியது) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீ- தன்னைவிட்டு அகன்றாற் சுடுவதும் தனக்கு நெருங்கினாற் குளிர்வதுமான புதுமைத் தீயை; இவள் யாண்டுப் பெற்றாள்- இவள் எங்கிருந்து பெற்றாள்? பாங்கற் கூட்டமாவது, முன்றாம் நாள் தலைமகள் இருக்குமிடத்தைத் தலைமகன் தோழன் வாயிலாக அறிந்துசென்று கூடியது. கூடு முன்னும் பிரியும்போதும் துன்புறுதலால் 'நீங்கிற் றெறூஉம்' என்றும், நெருங்கும் போதும் கூடும்போதும் இன்புறுதலாற் 'குறுகுங்காற் றண்ணென்னும்' என்றும், இத்தகைய தீ உலகத்திலில்லையாதலால் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். |
கலைஞர் உரை: |
நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள். |
சாலமன் பாப்பையா உரை: |
தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?. |
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை: |
(காதலியின் அணைப்பை விட்டுப் பிரிய முடியவில்லையே!) பிரிந்து விலக விலகச் சுடுகின்றது; நெருங்க நெருங்கக் குளிர்ச்சி தருகின்றது. இப்படிப்பட்ட நெருப்பு இவளுக்கு எங்கே கிடைத்தது? |
திருக்குறள் வீ. முனிசாமி உரை: |
தன்னைவிட்டு நீங்கினால் சுடுகின்றது; அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தன்மைத்தான தீயினை இப்பெண் எவ்வுலகில் பெற்றாள்?. |
Translation |
Withdraw, it burns; approach, it soothes the pain;
Whence did the maid this wondrous fire obtain?. |
Explanation |
From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?. |
Transliteration |
Neengin Theruium Kurukungaal Thannennum
Theeyaantup Petraal Ival |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|