|
|||||
காணமால் போன மலேசிய விமானம் கடலில் விழுந்ததை உறுதி செய்தது மலேசிய அரசு !! |
|||||
கடந்த 8-ந் தேதி நடு வானில் காணாமல் போன மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த 8-ந் தேதி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்குக்கு 239 பேருடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது. இதனையடுத்து விமானத்தையும், அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணிகள் போர்கால அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், தெற்கு இந்திய பெருங்கடலில் 2 மர்மபொருள் கிடப்பதை பார்த்ததாக ஆஸ்திரேலியாவும், மற்றொரு பொருளை பார்த்ததாக சீனாவும் நேற்று உறுதி செய்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய அரசு கூறுகையில், ‘பழுப்பு அல்லது பச்சை நிறத்தில் வட்டவடிவிலான ஒரு பொருளும், ஆரஞ்ச் நிறத்தில் செவ்வக வடிவிலான ஒரு பொருளும் கிடப்பதை ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. இதே போல, மற்றொரு இடத்தில் வெள்ளை நிறத்தில் சதுர வடிவிலான ஒரு பொருளை பார்த்ததாக சீனா உறுதி செய்துள்ளது. இவை மாயமான மலேசிய விமானத்தில் உடைந்த பாகங்கள்தானா என உறுதியாகவில்லை. இப்பொருட்களை கைப்பற்ற ஆஸ்திரேலிய கப்பல்கள் சம்பவ இடத்தை நெருங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மலேசிய அரசும் உறுதி செய்துள்ளது. இது குறித்து மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் கூறியதாவது, 239 பயணிகளுடன் கடந்த 8 ஆம் தேதி காணாமல் போன மலேசியா விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பயணம் செய்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேட, அமெரிக்க கடற்படையின் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தப்பட உள்ளது. அமெரிக்க கடற்படை நேற்று விடுத்த அறிக்கையில், ‘கடலில் மூழ்கிய விமானத்தின் கறுப்பு பெட்டியை கண்டுபிடிப்பதற்காகவே டிபிஎல்-25 சிஸ்டம் என்ற பிரத்யேகமாக கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் கறுப்பு பெட்டி விழுந்திருந்தாலும் கூட இக்கருவி மூலம் கண்டுபிடித்து விடலாம். இதனை மலேசிய விமானம் தேடும் பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. |
|||||
by Swathi on 24 Mar 2014 0 Comments | |||||
Tags: Malaysian PM Malaysian Flight 370 Flight 370 மலேசிய விமானம் மலேசிய பிரதமர் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|