அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருவதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இது பற்றி அமெரிக்காவின் சட்டனூக நகரில் அவர் பேசியதாவது, நாம் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், முதலீடுகளையும் பெருக்க வேண்டிய நேரம் இது, ஏனெனில் இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் நம்மை விட வேகமாக முன்னேறி வருகிறது. நம்நாட்டில் வசிக்கும் நடுத்தர வகுப்பினருக்கு, நல்ல சம்பளத்துடன் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் எதிர்கால வளர்ச்சிக்கு வழி செய்ய முடியும்.அமெரிக்காவில் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்து பார்த்தால், இப்போதுதான் முதல் முறையாக உற்பத்தி சார்ந்த வேலைகள் குறையவில்லை. அவை அதிகரித்து வருகின்றன. வர்த்தகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு அரசு அமைப்புகளை இணைக்கக் கூடிய 45 உற்பத்தி மற்றும் புத்தாக்க நிறுவனங்களை நாடாளுமன்றம் சட்டமியற்றி உருவாக்க வேண்டும். புதுமையான எரிசக்தி ஆதாரங்களை கண்டுபிடிக்கவும், மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்கள் ஆகியவற்றை இரட்டிப்பாக்கவும், எண்ணெய் இல்லாமல் வாகனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிக்கு பணம் செலவழிக்கவும் வேண்டிய நேரம் இது. நாம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யதால் தான் நம்நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் என ஒபாமா உரையாற்றினார்.
|