இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்ச் மற்றும் கியூக்ஸ் களம் இறங்கினர். அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட இந்த ஜோடி, 15.2 வது ஓவரில் 74 ரன்களை எட்டியபோது பிஞ்ச் அவுட் ஆனார். பின்னர் ஹியூக்ஸுடன் ஜோடி சேர்ந்த வாட்சன். இருவரும் தொடர்ந்து நிலைத்து ஆடினர். 31.6வது ஓவரில் 182 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்த நிலையில் வாட்சன் அவுட் ஆனார். பின்னர் ஹியூக்ஸ் 103 ரன்களில் அவுட் ஆனார். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களைக் குவித்தது.
இதனை அடுத்து, 360 ரன்கள் என்ற கடின இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஷிகார் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இரண்டு பேரும் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சமாளித்து அதிரடியாக ரன்களை சேர்க்க துவங்கினர். அதிரடியாக விளையாடிய தவான் அரைசதமடித்தார். அடுத்த சிறிது நேரத்தில் ரோகித் சர்மாவும் அரைசதமடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய தவான் 95 ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் பின்னர் வந்த விராட் கோஹ்லியும் அதிரடியாக சதமடிக்க, இறுதியில் இந்திய அணி 43.3 ஓவரில் 362 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலை செய்துள்ளது.
|