என்னதான் கோடி, கோடியாய் கொட்டி பிரபல நட்சத்திரங்களை வைத்து படம் எடுத்தாலும், போட்ட முதலில் பாதி கூட வராமல் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர்கள் தற்போது அதிகமாகி வரும் சூழ்நிலையில், வெறும் சில லட்சங்களை கொண்டு தயாரான ஒரு படம் கோடி ரூபாய் வசூலை தொட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ஆந்திராவில் வெளியான படம் "ஐஸ்க்ரீம்".
ஸ்பென்ஸ், த்ரில், காமெடி மற்றும் காதல் காட்சிகள் அடங்கிய இந்த "ஐஸ்க்ரீம்:" திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.2,11,832 தானாம்.
இந்த படத்தில் நடித்த நவ்திப், தேஜஸ்வி, சந்தீப்தி உள்பட எந்த நடிகர், நடிகைகளுக்கும் சம்பளம் இது வரையும் கொடுக்கப்படவில்லையாம். உடைகள் கூட நடிகர்களே அவர்களது வீட்டில் இருந்துதான் எடுத்துக்கொண்டு வந்தார்களாம். நடிகர்களை போலவே அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடபட வேண்டிய ஒன்று.
இந்த படத்திற்கு அதிகமாக செலவு செய்தது என்றால், ஒரு வீட்டை வாடகைக்கு வாங்கியது தானாம். மிக சாதாரண கேமிராவை கொண்டு, எந்த ஒரு லைட்டிங்ஸ் எபெக்ட் இன்றி எடுக்கப்பட்டதுதான் இந்த திரைப்படம். படம் முடிவடைந்ததும் ஒரே ஒரு நபர் கம்ப்யூட்டரில் சில தொழில்நுட்ப வேலைகள் செய்தார்.
தற்போது இந்த படம் வெற்றி பெற்று மாபெரும் வசூலை குவித்து வருவதால் இந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் கைநிறைய சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா முடிவு செய்துள்ளார். யூடியூபில் பதிவு செய்ய ஒரு குறும்படம் எடுப்பதற்கே லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள இந்த காலத்தில் வெறும் இரண்டு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் ஒரு முழு நீள திரைப்படத்தை எடுத்து ரிலீஸ் செய்து சாதனை செய்த ராம்கோபால் வர்மாவை ஆந்திர சினிமாயுலக பிரமுகர்கள் பாராட்டி வருகின்றனர்.
|