|
||||||||
ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் திருவள்ளுவர் சிலை நிறுவி , ஐரோப்பிய தமிழர்கள் நாளாக கொண்டாடப்படும் நிகழ்வு வரும் டிசம்பர் 4ல் ஒருங்கிணைக்கப்படுகிறது |
||||||||
ஜெர்மனி நாட்டில் 4.12.2019 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன் முறையாக இரண்டு ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட உள்ளன. மேலும் இந்த நாளை ஐரோப்பிய தமிழர்கள் நாளாகவும் கொண்டாடும் ஒருங்கிணைந்த விழாவாகவும் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ஐரோப்பாவில் முதன் முறையாக நிறுவப்படும் இந்த ஐம்பொன் சிலைகளில் முதல் சிலை தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் தமிழக பண்டைய மரபு சிற்ப நுட்பத்தின் அமைப்புடனும், தமிழரின் பாரம்பரிய உடை அலங்காரத்துடனும் மூன்று அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சிலை 1810ம் ஆண்டு திரு.எல்லிஸ் அவர்கள் வெளியிட்ட திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயத்தில் உள்ள திருவள்ளுவர் வடிவத்தின் அடிப்படையில் ஒன்றே முக்கால் அடி உயரத்தில் அமர்ந்த வடிவத்தில் சிற்பமாக ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிலைகளையும் சென்னை நுண்கலை கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழகத்தின் புகழ் பெற்ற சிற்பியும் ஓவியருமான ஓவியர் சந்ரு அவர்கள் வடிவமைத்துள்ளார். இந்த இரண்டு சிலைகளும் ஜெர்மனியில் உள்ள பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் தலைநகரான ஸ்டுட்கார்ட் நகரில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகமான லிண்டன் அருங்காட்சியகத்தில் சிறப்புப் பகுதியில் நிறுவப்பட உள்ளன. இந்தச் சிலைகளை நிறுவும் நிகழ்வை ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநில அரசின் ஒப்புதலோடு, தமிழ் மரபு அறக்கட்டளையும் லிண்டன் அருங்காட்சியகமும் இணைந்து நடத்துகின்றன. மேலும் இந்நிகழ்வில் 1803ம் ஆண்டு ஆகஸ்ட் ஃப்ரெடரிக் காமரர் என்பவர் ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்த திருக்குறள் மொழிபெயர்ப்பும், 1856ம் ஆண்டு டாக்டர்.கார்ல் கிரவுல் என்பவர் மொழிபெயர்த்த திருக்குறளின் முழுமையான ஜெர்மானிய மொழி பெயர்ப்பும், தமிழக ஆய்வாளர் கௌதம சன்னா அவர்கள் எழுதிய 'திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்' என்கிற புத்தகமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் திரு.கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருளும், உலகத்தின் பல்வேறு தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு அடங்கிய விழா மலரும் வெளியிடப்பட உள்ளன. இந்த நிகழ்வில் முதல் அமர்வாக சர்வதேச திருக்குறள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளைச் சார்ந்த தமிழ் அறிஞர்களும் தமிழ்ச்சங்கங்களின் தலைவர்களும் ஆய்வுரைகள் மற்றும் சிறப்புரைகளை நிகழ்த்த உள்ளனர். இறுதியாக நிகழ்வின் நிறைவு விழாவாக இரண்டு திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட்டு ஐரோப்பியத் தமிழர் நாளின் கொண்டாட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஐரோப்பியத் தமிழர்களின் ஒற்றுமையையும் ஒருங்கிணைவையும் சாத்தியப்படுத்துவதற்கான முயற்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை அனைவரின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கிறது. இது அனைத்து தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து முன்னெடுக்கும் விதமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.தொல்.திருமாவளவன், அருங்காட்சியகத்தின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர்.இனெஸ் டி கெஸ்ட்ரோ, தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி, அருங்காட்சியகத்தின் ஆசியவியல் இயக்குநர் டாக்டர். ஜோர்ஜ் நோவாக், எழுத்தாளர் கௌதம சன்னா, திரு.பாலகிருஷ்ணன் இஆப (ஓய்வு), ஓவியர் சந்ரு, ஜெர்மனிக்கான இந்தியத்தூதர் (மூன்ஷன் பகுதி) திரு.சுகந்த் ராஜாராம் மற்றும் ஐரோப்பியத் தமிழ்ச்சங்கங்களில் தலைவர்கள் பலரும் கலந்து சிறப்புரையாற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு.மாஃபா பாண்டியராஜன் அவர்களும், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் மற்றும் பன்னாட்டுத் தமிழ் அமைப்புக்களும் இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். இந்த முன்முயற்சி பல்வேறு நாடுகளிலும் திருவள்ளுவர் சிலைகள் வைப்பதற்குத் தமிழர் பெருமையை நிலைநாட்ட முன்மாதிரியாக இருப்பதில் தமிழ் மரபு அறக்கட்டளைப் பெருமை கொள்கிறது. இப்படிக்கு |
||||||||
by Swathi on 04 Dec 2019 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|