விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
முழுவதும் சீனாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஆளில்லா விண்கலமான சாங் இ-3 நேற்று அதிகாலை லாங் மார்ச்- 3பி ராக்கெட்டின் மூலம் ஷிசாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை தொடர்ந்து, விண்வெளி தொடர்பான விவகாரங்களில் மற்ற நாடுகளுடன் குறிப்பாக அண்டை நாடான இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீன விண்வெளி விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து, சந்திர விண்கலத் திட்டத்தின் தலைமைத் துணை கமாண்டர் லீ பென்ஜாங் கூறியதாவது, சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி போட்டி நோக்கத்தோடு நாங்கள் செயல்படவி்ல்லை. விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும். விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் அதனை மேம்படுத்த வேண்டும் என்றார். சாங் இ-3 விண்கலம், பூமி-சந்திரனின் சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி உள்ளளே சென்று விட்டதாக தெரிவித்த சீன விஞ்ஞானிகள், இந்த விண்கலம், டிசம்பர் மாத மத்தியில் சந்திரனில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
|