|
|||||
கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது! |
|||||
கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வுக்கு தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வு பிரிவு தனது அகழாய்வினை கடந்த 2015-ல் தொடங்கியது. இதில் கிடைத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை இவை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 2017 ஜனவரியில் 2-ம் கட்ட ஆய்வு தொடங்கப் பட்டது. இதில் சுமார் 6 ஆயிரம் தொல்பொருட்களின் மாதிரிகள் கிடைத்தன. இவை அனைத்தும் சென்னை மற்றும் பெங்களூர் தொல்லியல் துறையின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 3- ம் கட்ட ஆய்வு நிறுத்தப்பட்டு இந்த ஆய்வை மேற்கொண்ட அமர்நாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்த வேண்டும் என பல்வேறு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, 3- ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் நடைபெறும் என மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது. ராம் என்பவர் தலைமையில் ஆய்வு தொடர்ந்தது. அவரும் அறிக்கையை சமர்பித்தார். 4- ம் கட்ட ஆய்வை மேற்கொள்ள நிதியில்லை என மத்திய அரசு காரணம் காட்டியது. இதனையடுத்து தமிழகத் தொல்லியல் துறை அதனைக் கையில் எடுத்தது. இந்தப் பணிக்குக் கண்காணிப்பாளராக தமிழகத் தொல்லியல் துறையின் சிவானந்தம் நியமிக்கப்பட்டார். அவரும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பித்தார். இந்த நிலையில் தான் அடுத்த கட்ட ஆய்வை மேற்கொள்ளத் தமிழக அரசு சார்பில் மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. 5-ம் கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதத்தில் அனுமதி அளித்தது. மக்களவையின் கேள்வி நேரத்தில், தஞ்சை தொகுதி அ.தி.மு.க எம்.பி., கே.பரசுராமன், "கீழடி அகழாய்வுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் கார்பன் பகுப்பாய்வில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் எந்த காலத்தைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளதா" என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், கீழடி அகழாய்வுக்கு அரசு எடுத்து உள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேள்வி கேட்டு இருந்தார். இந்தக் கேள்விக்கு பதில் அளித்த மத்திய கலாசாரத் துறை துறை அமைச்சர் மகேஷ் சர்மா, `கீழடி அகழாய்வுக்கு 2015- 2016 நிதியாண்டில் 50 லட்சமும், 2016- 2017 நிதியாண்டில் ரூ.44.50 லட்சமும், 2017 -2018 நிதியாண்டில் ரூ.23.65 லட்சமும் தொல்லியல் துறைக்கு ஒதுக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் 2017 -2018 நிதியாண்டில் ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டது. கீழடியில் கிடைத்த பொருட்களை கார்பன் பகுப்பாய்வு செய்ததில் அவை கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. கீழடியில் 2018-19 ம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளத் தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது’’ என்று கூறியுள்ளார். |
|||||
by Mani Bharathi on 06 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|