திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.
தேவநேயப் பாவாணர் உரை:
அழுக்காறு - பிறராக்கம் பொறாமையும்; அவா - அவ்வாக்கத்தின்மேற் செல்லும் ஆசையும்; வெகுளி - அதைப் பெறாதவிடத்து எழும் சினமும்; இன்னாச் சொல் - அது பற்றிவருங் கடுஞ்சொல்லும்; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - ஆகிய இந் நான்கையும் விலக்கி நடந்ததே அறமாவது. (இழுக்கா = இழுக்கி )
கலைஞர் உரை:
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான் கையும் நீக்கிவிட்டுச் செய்கின்ற எல்லாக் காரியங்களும் அறங்களே யாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பொறாமையும், பேராசையும், கோபமும், கடுஞ்சொல்லும் ஆகிய நங்கும் விளக்கப்பட்டு நடைபெறுவதே அறமாகும்.
Translation
'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path.
Explanation
That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.