அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார். (மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகுபெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும்: சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும். இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானச் செய்திகளையே கூறி அவமானச் செய்திகளை மறைத்து விடுவர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றச் சிறுமை யுடை யாரோ பிறர் குணத்தையெல்லாம் மறைத்துக் குற்றங்களையே கூறிவிடுவர். இங்கும் மாந்தர் செயல்கள் அவர் பண்பின்மேல் எற்றிக்கூறப்பட்டன. மறைத்தலும் கூறுதலும் ஏனையிடத்தும் இயைந்தன. 'தான்' அசைநிலை. ஏகாரம் பிரிநிலை, இம்முன்று குறளும் வேற்றுமையணி கொண்டு இருசாரார் செயலையும் ஒருங்கு கூறின.
பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.