ஈரம் படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமான கிஷோர். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 30க்கும் அதிகமான படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' படம் இவருக்கு சிறந்த படத்தொகுப்புக்காக தேசிய விருதை பெற்று தந்தது. 'விசாரணை' படத்தின்மூலம் மீண்டும் இயக்குநர் வெற்றிமாறனுடன் பணியாற்றிக்கொண்டிருந்த இவர், அண்மையில் படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துக்கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கிஷோரின் மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தக் கட்டிகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என தெரிவித்தனர். இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் அவர் கோமா நிலையிலேயே நீடித்து வந்தார், பின்னர் மூளைச் சாவு அடைந்தார் என்று மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.
கிஷோருக்கு மூளைச் சாவு ஏற்பட்டதினால் அவரின் பெற்றோர்கள் அவரது உடல் உறுப்பு தானம் கொடுக்க முன்வந்துள்ளனர். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. உடல் உறுப்பு தானமாக அளிக்கப்பட்ட பின், இன்று சனிக்கிழமை (07-03-2015) அன்று வடபழனியில் உள்ள கிஷோரின் எடிட்டிங் ஸ்டுடியோவில் மதியம் 1 மணிக்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும்.
பின்னர் அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது என திரையுலக வட்டரங்கள் தெரிவிகின்றன.
|