மலேசியாவிலும் ஆதார் அட்டை கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி எண்கள் கொண்ட 12 இலக்க அடையாள அட்டையை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து 2009-ம் ஆண்டு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. பின்னர் படிப்படியாக அரசின் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகும் என்று சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்து உள்ளது. ஆதார் மூலமாக, மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக கிடைப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது.
ஆதாரின் வெற்றி குறித்து அறிந்த, மலேசிய அரசு, ஆதார் போன்ற திட்டத்தை தங்கள் நாட்டிலும் செயல்படுத்த முடிவு செய்து உள்ளது. ஆதார் போன்ற திட்டத்தை செயல்படுத்த, மலேசிய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நிதித்துறை உள்ளிட்ட அமைச்சகங்களின் பிரதிநிதிகள், மத்திய வங்கி பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
மலேசிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், குலசேகரன் தலைமையிலான குழு, சமீபத்தில், இந்தியா வந்து, இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது. இதைத்தொடர்ந்து, ஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மலேசியாவில் ஏற்கனவே, மைகாட் (MYKAD) என்ற பெயரில் தேசிய அடையாள அட்டை பயன்பாட்டில் உள்ளது. எனினும், இதை மேம்படுத்தி ஆதார் போன்ற பல்வேறு தரவுகளை உள்ளடக்க அந்நாடு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது
|