உலகத் தமிழ்க்காப்புக் கூட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற, 'எங்கும் தமிழ் எதிலும்' தமிழ் எழுச்சி மாநாடு
மொழி என்பது கருத்தைத் தெரிவிக்கும் கருவி மட்டுமல்ல,அது ஒரு இனத்தின் அடையாளமாகவும் உள்ளது. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால், அந்த இனத்தின் மொழியை அழி' என்று கூறுவர். ஒரு மொழியானது மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இருந்தால் மட்டுமே அது தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்கும் மொழியாக இருக்கும், இல்லை எனில் அது மெல்லச் சாகும் நிலைக்குச் சென்று விடும். 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற தலைப்போடும், நோக்கத்தோடும் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் ஆண்டகளூர்கேட் பகுதியின் காசி விநாயகர் ஆலய வளாகத்தில் வைத்து உலகத்தமிழ்க்காப்பு கூட்டியக்கத்தின் சார்பாக, எழுச்சி மாநாடு நடைபெற்றது, இம்மாநாட்டிற்கு மு.சி. சுப்பிரமணியம் (மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மேனால் பதிவாளர், பாரதியார் பல்கலைக்கழகம்) அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார். அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை தலைவர் செ.துரைசாமி அவர்கள் பங்கேற்று வரவேற்புரை வழங்கினார்.பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் இரா.செகந்நாதன் கருத்துரை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி சின்ராசு அவர்கள் வாழ்த்துரை வழங்க புலவர் கா.அப்பாவு (தலைவர் தமிழ்க்காப்புக் கூட்டியக்கம்) நிறைவுரை வழங்கினார்.திரு.மயில்சாமி அண்ணாதுரை (முன்னாள் இயக்குனர், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம், வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் இராஜேஷ்குமார், கவிஞர் அறிவுமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக மாநாட்டில் பங்கேற்று இருந்தனர். மற்றும் பல தமிழ் அறிஞர்களும் பங்கேற்று எழுச்சி மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
தமிழ் வளர்ச்சி, விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் உலகத்தமிழ் பெயர்கள் பேரியக்கத்தை தொடங்கி வைத்து, பெயர் பட்டியல் வெளியிட்டு பேசிய போது இந்த அரசு தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் என்று கூறினார். இமாநாட்டின் தீர்மானங்களும், முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் கூறினார்.முன்னாள் இஸ்ரோ இயக்குனர் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், இயல், இசை நாடகத் தமிழோடு அறிவியல் தமிழும் இருக்க வேண்டும் என்று கூறினார். மாநாட்டில் பங்கு பெற்றிருந்த தமிழ் துறை சார்ந்த பெரியோர்கள் பலர் இவ்விழாவில் தம் பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.
|