தமிழ்வழிக் கல்வி ஆட்சியர் கனவிற்கு தடையில்லை, மேற்குவங்க உதவி ஆட்சியாளராக பதவியேற்றுள்ள தமிழ் ஓவியா
மத்திய அரசுப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று, மேற்குவங்க உதவி ஆட்சியாளராக பதவி ஏற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் ஓவியா என்ற பெண். இவர் பழனி, கரிக்காரன் புதூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். இவரது தந்தை சௌந்தரபாண்டியன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்,தாயார் முருகேஸ்வரி,ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்தவர். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர் தமிழ் ஓவியா. வங்கிப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று கனரா வங்கியில் பணியாற்றியுள்ளார். படிப்பில் கவனம் செலுத்த முடியாத காரணத்தால் வேலையை விட்டுவிட்டு போட்டித் தேர்வில் வெற்றி பெற்று மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். ஆட்சியர் கனவை விட்டு விடாமல் தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நான்காவது முறை IAS தேர்வினை எழுதி வெற்றி பெற்றுள்ளார். ஆங்கிலம் மொழி மட்டுமே அறிவு அல்ல. மொழி ஒரு தடையே இல்லை. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று தமிழ் ஓவியா கூறியுள்ளார். தேர்விற்கான விருப்ப பாடமாக தமிழையே தேர்வு செய்துள்ளார் தமிழ் ஓவியா.
|