சாகித்திய அகாதமி பால புரஸ்கார்,யுவ புரஸ்கார் 2023,விருது பெறும் தமிழர்கள்
இலக்கிய உலகின் உயர்ந்த அங்கீகாரத்தை அளிக்கும் விருதாகப் பார்க்கப்படும் சாகித்திய அகாதமி விருதுகள் 2023 அறிவிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் இலக்கியப் படைப்பினை ஊக்குவிக்கும் விதமாக சாகித்திய அகாதமியால் வழங்கப்படும் பால புரஸ்கார் விருது
2023 தமிழக எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் 'ஆதனின் பொம்மை' என்ற நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நாவல் கீழடி மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் குறித்த அறிவை இளம் சமூகத்திற்கு வழங்குவதாக உள்ளது. எழுத்தாளர் உதயசங்கர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இந்திய ரயில்வேயில் பணியாற்றியுள்ளார். தூரம் அதிகம் இல்லை, கண்ணாடிச் சுவர்கள், நீலக்கனவு போன்ற சிறுகதைகளை எழுதியுள்ளார். மாயக்கண்ணாடி,பச்சை நிறம்,பேசும் தாடி, ரகசியக் கோழி, அண்டா மழை போன்றவை இவருடைய குழந்தைகளுக்கான படைப்புகள்.மேலும் இவர் குறிப்பிடத்தக்க அளவில் மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். கட்டுரைகளையும் எழுதி உள்ளார். 35 வயதுக்குட்பட்ட இலக்கியப் படைப்பாளிகளுக்காக வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் இராம் தங்கம் அவர்கள் எழுதிய 'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்பிற்கு கிடைத்துள்ளது.எழுத்தாளர் இராம் தங்கம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பிறந்தவர். வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் திருக்கார்த்தியல் சிறுகதை தொகுப்பிற்கென்று பல விருதுகளைப் பெற்றுள்ளார். சுஜாதா விருது (திருக்கார்த்தியல்) அசோகமித்திரன் விருது (திருக்கார்த்தியல்), படைப்பு இலக்கிய விருது (இராஜவனம் குறுநாவல்),சிறந்த வரலாற்றுப் புத்தகத்திற்கான 'தெற்கு எழுத்தாளர் இயக்க விருது' (காந்திராமன்).இவர் நாவல், கட்டுரைகள், சிறுகதை தொகுப்புகள், வரலாற்று நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.
|