தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள் மிகுந்த முக்கியத்துவத்தினை பெற்று வருகின்றன. தொடர்ந்து தமிழர் வாழ்ந்த பகுதிகளில் இருந்து பழமையும் நாகரிகச் சிறப்பும் கொண்ட பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் ஏழு மாவட்டப் பகுதிகளில் பல்வேறு கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சங்க கால கோட்டை அமைந்திருப்பதற்கான தடயத்தைக் கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் தொல்லியலாளர்கள் கரு.ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், ஆ. மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் காரணமாக அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டு முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இங்கு ஆரம்பத்திலேயே சங்ககால செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் பல பொருட்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. தற்போது தங்கக் காதணி(0.26 கிராம்), மூக்குத்தி, எலும்பு முனைக் கருவி கார்னீலியன் பாசிமணி (சூது பவளமணி) ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. தங்கக் காதணி,மூக்குத்தி போன்றவை பண்பாட்டின் சிறப்பை வெளிப்படுத்துவதாக உள்ளன.கார்னீலியன் கற்களால் ஆன சூது பவளமணி உள்நாட்டு வணிகத்தை அறிய உதவுகிறது. எலும்பு முனைக் கருவி நூல் நூற்பதற்காக நெசவுத் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
|