உறை கிணற்றில் பொறிக்கப்பட்டுள்ள மீன் சின்னம்
கீழடியில் தொடர்ந்து அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. சிறந்த நாகரிகம் கொண்ட தமிழர் வாழ்ந்த பகுதியாக கீழடி இருந்துள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. நாகரிகச் சிறப்பு மற்றும் வணிகம் ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லும் ஆயிரக்கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள கீழடியில் தற்போது மீன் சின்னம் பொறிக்கப்பட்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் இதுவரை ஏழு கட்ட அகழாய்வுகள் நடந்துள்ளன. அமைச்சர் தங்கம் தென்னரசு உறை கிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை பெருமிதத்தோடு தெரியப்படுத்தியுள்ளார்.
இணை இயக்குனர் சிவானந்தம் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஏழாம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் பொதுமக்கள் பார்வையிட திறந்தவெளி அகழ் வைப்பகமாக ஏற்படுத்தப்படும். அகழாய்வு குழிகள் திறந்த நிலையில் வைப்பது இதுவே முதன் முறை.இவை பார்வைக்கு வைக்கப்படும் போது கட்டுமானங்களை பாதுகாப்பதற்கான தொழில்நுட்பம் சென்னை ஐஐடி மூலமாக ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
மணற்பாங்கான இடத்தில் தோண்டும் போது மணல் சரிந்து விழாதிருக்க சுடுமண் கொண்டு வளையம் அமைத்து கிணறு அமைத்துள்ளனர் தமிழர்கள். பட்டினப்பாலை போன்ற இலக்கியங்களில் உறை கிணறு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 'உறைகிணற்று புறச்சேரி' என பட்டினப்பாலை நூல் உறை கிணறு பற்றி கூறுகிறது. இப்போது கிடைத்துள்ள இந்த உறை கிணறு சங்க காலத் தமிழர் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக பயன்படுத்துவதாக இருந்துள்ளது.
|