|
|||||
கல்வெட்டியல் கலைச்செம்மல் செ.ராசு காலமானார் |
|||||
சிறந்த கல்வெட்டு அறிஞரும், தொல்லியலாளருமான புலவர் செ.ராசு அவர்கள் வயது மூப்பின் காரணமாக காலமானார். புலவர் செ.ராசு அவர்கள் மிகச் சிறந்த கல்வெட்டு அறிஞராக அறியப்பட்டவர். விரிவுரையாளராகவும், தொல்லியளாலராகவும் பணிபுரிந்துள்ளார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை வெள்ள முத்துக் கவுண்டன் வலசு கிராமத்தில் 1938 -ஆம் ஆண்டு, ஜனவரி 2-ஆம் நாள் புலவர் செ.ராசு பிறந்தார். பெற்றோர் ந. சென்னியப்பன், நல்லம்மாள்,மனைவி கௌரி மற்றும் மூன்று மகன்களும் உள்ளனர். 1959 ஆம் ஆண்டில் ஈரோட்டில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர். 1980-1982 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்துள்ளார். பின்னர் அதே 1982 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்த பின் கல்வெட்டு, தொல்லியல் துறையில் தலைமைப் பொறுப்பில் இருந்து தன் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். பள்ளிக்கல்வியினை திருப்பூர், கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், ஞானிபாளையம், ஈரோடு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை,முதுநிலை பட்டங்களைப் பெற்றவர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் 'கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கொங்குநாடு மற்றும் கச்சத்தீவு ஆகிய இடங்கள் பற்றி நூல்கள் பல எழுதியுள்ளார். ஆழமான வரலாற்று ஆதாரங்கள் பலவற்றை இந்நூல்கள் கொண்டுள்ளன. நூற்றுக்கு மேலான புத்தகங்கள், சுமார் 250 கட்டுரைகளையும் எழுதி உள்ளார். பழங்கால கல்வெட்டுகள் பற்றிய தெளிந்த அறிவும் அனுபவமும் உடையவர். சுமார் 50 வருட கல்வெட்டுகள், சுவடிகள் செப்பேடுகள் தொடர்பான பட்டறிவும் கள அறிவும் மிக்கவர். 2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை வழங்கிய உ.வே.சா விருதினை முதன்முதலாகப் பெற்ற பெருமைக்குரியவர். இவரது 'தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்' நூல் 1983- ஆம் ஆண்டில் சிறந்த வரலாற்று, தொல்பொருள் நூலாக தேர்வு செய்யப்பட்டது. கல்வெட்டு அறிஞர், கல்வெட்டியல் கலைச்செம்மல், பேரூராதீனப் புலவர் என்ற பட்டங்களை தமிழ் அமைப்புகள் இவருக்கு வழங்கியுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல கல்வெட்டுகள், செப்பேடுகள் சுவடுகளைப் பதிப்பித்து தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய புலவர் செ.ராசு அவர்கள் மறைவு தமிழ் ஆய்வு உலகத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். |
|||||
by R.Gnanajothi on 06 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|