பேராசிரியர் கா. இராமசாமி அவர்களுக்கு செம்மொழி தமிழ் விருது -2023 வழங்கப்பட உள்ளது. இதனை அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்புச் செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர்,முனைவர் க.இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பிறந்தவர். பெற்றோர் கந்தசாமி, வள்ளியம்மாள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முதுகலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மொழிகள் பல அறிந்தவர். தமிழை வளப்படுத்தி வளர்க்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர். செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக இருந்து, சிறப்பாக செயல்படுவதற்கான வேராக விளங்கியவர். நல்லப்பன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான செம்மொழி தமிழ் விருது-2023,விருது வழங்கும் நிகழ்வு வருகிற 05.09.2023 காலை 11.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
இந்திய மொழிகள் தொடர்பாக மத்திய அரசின் முன்னாள் துணை இயக்குனரும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் க. இராமசாமி அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான செம்மொழி தமிழ் விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கருணாநிதி(2006-2011) முதல்வராக இருந்தபோது, செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் பொறுப்பு அலுவலராக பணிபுரிந்துள்ள க.இராமசாமி அவர்கள் தமிழ் செம்மொழி என்பதற்கான ஆவணங்களை சேகரித்துக் கொடுத்தவர். கலைஞருடன் கலந்து பேசி விருதுகள் பலவற்றையும் உருவாக்கியவர். அவற்றில் முக்கியமானது தான் செம்மொழி தமிழ் விருது .இப்போது இவ்விருது அவருக்கே வழங்கப்பட உள்ளது.
பணி நிறைவிற்குப்பின் அவரால் 'தமிழ் பண்பாட்டு பேரமைப்பு' என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு ஆறு புத்தகத் திருவிழாக்களை அரியலூரில் நடத்தியுள்ளது. முதல் புத்தகத் திருவிழா 2015- ஆம் ஆண்டில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது அரசுடன் இணைந்து ஏழாவது புத்தகத் திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
|