சந்திராயன்-3 வெற்றிச் சோதனை, மாணவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி இனிப்பு வழங்கி கொண்டாட்டம் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு உதவி பெறும் பள்ளியில் சந்திராயன்-3 விண்கலச் சோதனை மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் வகுப்பறை (Smart Class) மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழிப் பகுதியில் குல்லம்பட்டி ,அரசு உதவிபெறும் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இத்துவக்கப் பள்ளியில் 110 மாணவர்கள் படிக்கின்றனர். சந்திராயன்-3, நிலவில் தரையிறங்கும் நொடிகள், இப்பள்ளி மாணவர்களுக்கு நேரடியாக ஆசிரியர்களால் மெய்நிகர் கற்றல் வகுப்பறையில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. சந்திராயன்- 3 நோக்கம் மற்றும் செயல்பாட்டினையும் ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். சந்திராயன்-3 வெற்றிச் சோதனையில் விஞ்ஞானிகளது திறமையும், உழைப்பும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டு, இனிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.செல்வ கணேசன் மற்றும் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்கான சிறந்த முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அரசு உதவி பெறும் இப்பள்ளியின் தோற்றம் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் வண்ணமயமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரும்பலகை இல்லை ,வெண்பலகை(White Board)உள்ளது. இது குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து தெளிவோடு பாடம் நடத்த உதவுகிறது என இங்கு பணியாற்றும் ஆசிரியர் கூறுகிறார். வகுப்பறைகள் ஒவ்வொன்றிலும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது.சுத்தமான குடிநீர் வசதி, மற்றும் மதிய உணவு ஆசிரியர்களின் செலவோடு இங்கு மேலும் தரமாக வழங்கப்படுகிறது. பள்ளியில் இணைய வசதி உள்ளது. மெய்நிகர் கற்றல் வகுப்பறை (Smart Class) மூலமாகவும் பாடங்கள் விளக்கப்படுகின்றன. முக்கிய தினங்கள் பள்ளியில் கவனமாக கொண்டாடப்படுகின்றன மற்றும் கடைபிடிக்கப்படுகின்றன. பள்ளியின் பகுதிகளில் அழகிய பூச்செடிகளும், மரங்களும் வளர்க்கப்பட்டு அவைகள் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பராமரிக்கப்படுகின்றன. அருப்புக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட புத்தக் கண்காட்சி விழாவில், மாவட்ட ஆட்சியர் முன்பாக இங்கு படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் புத்தக அறிமுகம் செய்துள்ளனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. செல்வகணேசன் அவர்களிடம் பேசியபோது, மாணவர்களது திறன்களையும் திறமைகளையும் வெளிக்கொணர்பவரே சிறந்த ஆசிரியர் அதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார்.
|