துலுக்கர்பட்டி அகழாய்வில் தமிழி எழுத்துகளில் 'புலி' என்று எழுதப்பட்டுள்ள பானையோடு கண்டெடுப்பு
தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் மூலம் தமிழ் மொழி மற்றும் தமிழர் நாகரிகத்தின் பழமையும் செழுமையும் நிரூபிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. கீழடி கொந்தகை அகரம் மற்றும் மணலூர் (சிவகங்கை மாவட்டம்), சிவகளை (தூத்துக்குடி), கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்), மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்) ,துலுக்கர் பட்டி (திருநெல்வேலி), பெரும்பாலை (தருமபுரி) ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன .ஒவ்வொரு பகுதியிலும் நாகரிகத்தை எடுத்துரைக்கும் பல்வேறு பழங்காலப் பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. தற்போது 'புலி' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு வண்ண பானையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது, என அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தனது கீச்சக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழி எழுத்துகளில் 'புலி' என்று பொறிக்கப்பட்டுள்ள இப்பானையோடு குறிப்பிடத்தக்க ஒன்றாகும், எனக் குறிப்பிட்டுள்ள அவர் பொருநை (தாமிரபரணி) ஆற்றின் கரையில் நிலவிய, ஆதிச்சநல்லூர் பண்பாட்டின் காலத்தை நிலை நிறுத்துவதில் நம்பியாற்றின் அருகே துலுக்கர் பட்டியில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சி பெரும் துணை புரிகின்றது என்றும் கூறியுள்ளார்.
|