|
|||||
சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்கு! |
|||||
சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சபரிமலை கோயிலுக்கு, 2 பெண்கள் சன்னிதானம் வரை வந்தபோது அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 2 பெண்களை சன்னிதானத்திற்குள் அனுமதிக்க மறுத்து நடைபந்தல் பகுதியில் சன்னிதானத்திற்கு செல்லும் பாதையில் அமர்ந்து ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக 2 பெண்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். பக்தர்களின் தொடர் போராட்டத்தால் சபரிமலை பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் ஆகிய பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சன்னிதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடரும் நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நிலக்கல்லில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சபரிமலையில் 18 படியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட உதவி அர்ச்சகர்களுக்கு தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Mani Bharathi on 20 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|